என் மலர்
செய்திகள்

முக ஸ்டாலின்
மக்களுக்கான முக்கிய வாக்குறுதிகள்- முக ஸ்டாலின் அறிவிக்கிறார்
அடுத்தகட்ட பிரசாரம் மற்றும் மக்களுக்கு கொடுக்கப்போகும் முக்கிய வாக்குறுதிகள் குறித்து, சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்க உள்ளார்.
சென்னை:
அடுத்தகட்ட பிரசாரம் மற்றும் மக்களுக்கு கொடுக்கப்போகும் முக்கிய வாக்குறுதிகள் குறித்து, சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்க உள்ளார்.
வரப்போகும் சட்டமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மிக தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். கொரோனா காலத்திலும் ‘ஒன்றிணைவோம் வா' என்ற பெயரில் மக்கள் கேட்கும் உதவிகளை, அவர்களது பகுதிகளுக்கே சென்று வழங்கும் திட்டத்தை அவர் செயல்படுத்தினார். இந்த திட்டத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினர்.
அதனைத்தொடர்ந்து ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் ஒரு பிரசார திட்டத்தை மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதி மாறன், திருச்சி சிவா உள்பட 20 தலைவர்கள் தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட அவர் உத்தரவிட்டிருந்தார். அதன்படியே அந்த பிரசாரம் நடந்தது.
இந்தநிலையில் கடந்த டிசம்பர் மாதம் 20-ந் தேதி ‘மக்கள் கிராம சபை கூட்டம்' என்ற திட்டத்தை மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதற்கேற்ப டிசம்பர் 23-ந் தேதி முதல் கடந்த 21-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் தி.மு.க. தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் 22 ஆயிரம் மக்கள் கிராம சபை கூட்டங்களை நடத்தி உள்ளனர்.
முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தொகுதிகளில் 22 மக்கள் கிராம சபை கூட்டங்களை மு.க.ஸ்டாலின் நடத்தி உரையாற்றினார். அதன்படி தனது முதல் மக்கள் கிராம சபை கூட்டத்தை காஞ்சீபுரத்திலும், கடைசி கூட்டத்தை நேற்று முன்தினம் மதுரவாயலிலும் மு.க.ஸ்டாலின் நடத்தினார்.
தற்போது தி.மு.க.வின் அடுத்தகட்ட பிரசாரத்தை எந்த வகையில் முன்னெடுத்து செல்வது? மக்களுக்கு கொடுக்கப்போகும் முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன? என்பதை இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு, சென்னை கோபாலபுரத்தில் உள்ள மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதியின் இல்லத்தில் வைத்து மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் அறிவிக்கிறார்.
Next Story