search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    காதல் மனைவியை பிரித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி - உறவினர்கள் சாலை மறியல்

    கிருஷ்ணகிரி அருகே காதல் மனைவியை பிரித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அவருடைய உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி ஒன்றியம் சோக்காடி அடுத்த கே.வி.கோவில் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 24). இவரும், சுண்டேகுப்பம் அடுத்த மணி நகரை சேர்ந்த சவுமியா (20) என்பவரும், காதலித்து கடந்த 25-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் கடந்த 28-ந்தேதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர்.

    இதையடுத்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இருவீட்டு பெற்றோரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊர் பெரியவர்கள் முன்னிலையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தி கணவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம் என பெண்ணின் குடும்பத்தினர் எழுதி கொடுத்துவிட்டு, அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் தேவராஜின் உறவினர் சின்னசாமி கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அதில் காதல் திருமணம் செய்த 2 பேரையும் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

    இந்த நிலையில் காதல் மனைவியை பிரித்ததால் மனமுடைந்த தேவராஜ் நேற்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனிடையே நேற்று தேவராஜின் உறவினர்கள் அந்த மருத்துவமனை முன்பு காதல் திருமணம் செய்த 2 பேரையும் சேர்த்து வைக்க கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதற்கு தனியார் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×