என் மலர்
செய்திகள்

ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முறைகேடு- வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 2 பேர் சஸ்பெண்டு
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் கீழ் 13 கிராம ஊராட்சிகள் உள்ளது.
இந்த நிலையில் ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை பார்க்கும் சிலர், கிராம ஊராட்சி பணிகளை குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே ஒதுக்கி வந்துள்ளனர்.
மேலும் இவர்களாகவே புதிய திட்டங்களை செயல்படுத்தியதாக கூறி தீர்மான புத்தகத்திலும் வரவு, செலவு கணக்குகளை ஏற்றி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபற்றிய புகார் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு வரவே, அவர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதில் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு வேலை பார்க்கும் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன், மேலாளர் ராஜ்குமார் ஆகியோரை சஸ்பெண்டு செய்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார். அவர்களிடம் தொடர்ந்து துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.