என் மலர்
செய்திகள்

முதியோர், கர்ப்பிணி பெண்களுக்கு வீடு தேடிச்சென்று கொரோனா பரிசோதனை- மல்லாடி கிருஷ்ணாராவ் தகவல்
புதுச்சேரி:
கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் சட்டசபை வளாகத்தில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வளர்ச்சி ஆணையர் அன்பரசு, சுகாதாரத்துறை செயலாளர் அருண், இயக்குனர் மோகன்குமார் மற்றும் சுகாதாரதுறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
கூட்டத்தில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பேசியதாவது:-
கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் வீடுகளில் உள்ள முதியோர், குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு வீடு தேடிச் சென்று பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தொற்று அதிகம் உள்ள 25 பகுதிகள் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் வீடு, வீடாக சென்று அவர்களுக்கு கொரோனா உள்ளதா? என மாதிரி சேகரிக்கப்பட வேண்டும் என்றார்.
தொடர்ந்து நடந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு பணிக்கான லேப் டெக்னீசியன் பணிக்கு ஜிப்மரில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. மேலும் கொரோனா நோயாளிகளை இடமாற்றம் செய்ய பி.ஆர்.டி.சி. மினிபஸ் ஆகியவற்றை பயன்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அதோடு, 10 புதியதாக ஆம்புலன்ஸ்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. புதிய ஆம்புலன்ஸ் வரும் வரை தனியார் ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.






