search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமி ருத்திரபிரியா - இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்
    X
    சிறுமி ருத்திரபிரியா - இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்

    ஈரோட்டில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு

    ஈரோட்டில் வாசலில் விளையாடியபோது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சிறுமி பரிதாபமாக இறந்தாள்.
    ஈரோடு:

    ஈரோடு கிருஷ்ணம்பாளையம் கக்கன் நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 34). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி ராகவி. இவர்களுடைய மகன் ஜீவன்குமார் (6). மகள் ருத்திரபிரியா (3). பிரேம்குமார் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய வீட்டுக்கு முன்பு செல்லும் சாக்கடையை சீரமைக்கும் பணி நேற்று பகலில் நடந்தது. அப்போது பொக்லைன் எந்திரம் மூலமாக குழி தோண்டப்பட்டது.

    இந்த பணி முடிந்த பிறகு தொழிலாளர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்த நிலையில் ஜீவன்குமாரும், ருத்திரபிரியாவும் இரவு 7 மணிஅளவில் வீட்டுக்கு முன்பு வாசலில் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது வீட்டின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து ஜீவன்குமார், ருத்திரபிரியா ஆகியோர் மீது விழுந்தது.

    இதைப்பார்த்ததும் ராகவி மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடோடி வந்தனர். அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த குழந்தைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஜீவன்குமார், ருத்திரபிரியா ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ருத்திரபிரியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ஜீவன்குமாருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×