என் மலர்
செய்திகள்

வேலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவிகளிடம் நூலகர் சில்மிஷம்- மாணவர்கள் போராட்டம்
வேலூர்:
வேலூர் அரசு தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நூலகராக தாமோதரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாணவிகளை தூய்மைப்பணி செய்வதற்காக நூலகத்திற்கு வரவழைத்து சில்மிஷம் செய்துள்ளார். இதுபற்றி மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நூலகரின் அட்டகாசம் தொடர்ந்துள்ளது. அவர் தொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். இதுகுறித்து மாணவிகள் மீண்டும் புகார் அளித்தனர். இதனையடுத்து நூலகர் தாமோதரன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான அறிக்கை அங்குள்ள தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நூலகர் தாமோதரன் வேண்டுமென்றே மாணவிகளை தனியாக நூலகத்தை சுத்தம் செய்ய அழைத்து செல்வார்.
அப்போது செல்லும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து வெளியில் கூற கூடாது என மிரட்டியுள்ளார். இதனை அவர் 4 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து செய்ததாக தெரிகிறது.
இதுபற்றி கல்லூரி நிர்வாகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நூலகர் மீது வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம்.
போலீசார் அவர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. புகாரை திரும்ப பெறும்படி கல்லூரி நிர்வாகம் எங்களை மிரட்டுகிறது.
நூலகர் தாமோதரனை கல்லூரிக்கு வரவழைத்து மாணவிகள் முன்பாக அவருக்கு தண்டனை அளிக்க வேண்டும். அவரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும் அதுவரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். மாணவர்களின் போராட்டத்தால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.






