search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தொண்டி அருகே வாக்குச்சாவடிக்குள் நுழைந்து அதிகாரியை மிரட்டிய 8 பேர் கைது

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே வாக்குச்சாவடிக்குள் நுழைந்து அதிகாரியை மிரட்டிய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே திருவாடானை பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட கொடிப்பங்கு கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு மண்டபம் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்து வரும் ராமகிருஷ்ணன் மைக்ரோ அப்சர்வாக நியமிக்கப்பட்டிருந்தார்.

    தேர்தல் பணியின் போது கிராமத்தைச்சேர்ந்த ரவிச்சந்திரன்(49), சங்கர் (45), கருணாகரன் (23), கருப்பையா (23), தங்க வேல் (40), சுரேஷ் (23) உள்பட 8 பேர் அத்துமீறி வாக்குச்சாவடிக்குள் நுழைந்து தேர்தல் அதிகாரியான ராமகிருஷ்ணனை அவதூறாக பேசி பணி செய்யவிடாமல் தடுத்தனர்.

    மேலும் இவர்களது நடவடிக்கை வாக்களிக்க வந்த பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக இருப்பதாக தொண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரணை நடத்தினார். 8 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    Next Story
    ×