என் மலர்
செய்திகள்

தாளவாடி அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
தாளவாடி:
கர்நாடக மாநிலம் மைசூர் அடுத்த வீரனகெரெ பகுதியைச் சேர்ந்தவர் மாதேவப்பா. இவரது மனைவி மாதேவம்மா (வயது 63). இவர்களுக்கு நாகராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மாதேவம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறப்படுகிறது.
இதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த கரள வாடி பகுதியில் உள்ள தனது தம்பி வீட்டுக்கு வந்தார். அங்கு தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று தனியாக இருந்த மாதேவம்மா தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து மண்ணெண்ணெய் கேனை எடுத்து தனக்குத்தானே உடல் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். எனினும் மாதேவம்மா இறந்து போனார்.
இது குறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






