search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனுமதியின்றி கலந்துரையாடல் நடத்தியது ஏன்? - கமல்ஹாசன் கூட்டம் நடத்திய பள்ளிக்கு நோட்டீஸ்
    X

    அனுமதியின்றி கலந்துரையாடல் நடத்தியது ஏன்? - கமல்ஹாசன் கூட்டம் நடத்திய பள்ளிக்கு நோட்டீஸ்

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவையில் உரிய அனுமதியின்றி கலந்துரையாடல் நடத்தியது தொடர்பாக பள்ளிக்கு விளக்கம் கேட்டு தேர்தல் அலுவலர்கள் இன்று நோட்டீசு அனுப்ப உள்ளனர். #LSPolls #KamalHaasan
    கோவை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவையில் நேற்று பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

    முன்னதாக சிங்காநல்லூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நேற்று மதியம் டாக்டர்களுடன் கலந்துரையாடினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு சிங்காநல்லூர் தொகுதி பறக்கும் படை அலுவலர்கள் சென்றனர்.

    உரிய அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்தக்கூடாது என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து கலந்துரையாடல் கூட்டம் பாதியிலேயே முடித்துக் கொள்ளப்பட்டது. இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

    இந்நிலையில், உரிய அனுமதியின்றி கூட்டம் நடத்த அனுமதி வழங்கியது ஏன்? என விளக்கம் கேட்டு விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கலெக்டர் ராஜாமணி, சிங்காநல்லூர் தொகுதி தேர்தல் உதவி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் பள்ளிக்கு விளக்கம் கேட்டு தேர்தல் அலுவலர்கள் இன்று நோட்டீசு அனுப்ப உள்ளனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், உரிய அனுமதியின்றி கூட்டம் நடத்தியது தொடர்பாக விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட பள்ளிக்கு இன்று நோட்டீசு அனுப்பப்படும். அதன் பேரில் அவர்கள் விளக்கம் அளிப்பார்கள். விளக்கம் திருப்திகரமாக இல்லையென்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். #LSPolls #KamalHaasan
    Next Story
    ×