search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடவள்ளியில் கூடுதல் விலைக்கு மது விற்ற பார் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு
    X

    வடவள்ளியில் கூடுதல் விலைக்கு மது விற்ற பார் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு

    வடவள்ளியில் கூடுதல் விலைக்கு மது விற்ற பார் உரிமையாளருக்கு அவரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வடவள்ளி:

    கோவை வடவள்ளி சிறுவாணி மெயின் ரோட்டில் 3 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இதில் முதலாவது கடை மகாராணி அவென்யூவில் உள்ளது. இந்த டாஸ்மாக் மதுக்கடையில் அதே பகுதியை சேர்ந்த பதி என்ற பழம்பதி (வயது 43) என்பவர் பார் நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு 10 மணிக்கு வழக்கம்போல் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. 10.30 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பார் உரிமையாளர் பழம்பதியிடம் மதுகேட்டனர். பார் உரிமையாளர் கூடுதல் விலைக்கு மது விற்றதாக கூறப்படுகிறது.

    மதுக்கடையை விட மிக கூடுதல் பணம் கேட்டதால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் பார் உரிமையாளரிடம் வாக்குவாதம் செய்தனர். இது குறித்து அறிந்ததும் பார் ஊழியர்கள் அங்கு வந்தனர். பார் உரிமையாளரும், ஊழியர்களும் சேர்ந்த 2 வாலிபர்களையும் தாக்கினர். மேலும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் ஒருவரது செல்போனை பறித்து விரட்டி விட்டனர்.

    வேறு இடத்துக்கு சென்ற வாலிபர்களில் ஒருவரிடம் இருந்த செல்போன் மூலம் தனது நண்பர்களுக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் 3 கார்களில் 15-க்கும் மேற்பட்ட நண்பர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    மதுபாரை மூடிவிட்டு பழம்பதி மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். மகாராணி அவென்யூ சந்திப்பு அருகே வந்தபோது 3 கார்களில் வந்த நண்பர்களுடன் ஏற்கனவே இருந்த 2 வாலிபர்களும் வழிமறித்தனர்.

    நண்பர்களை தாக்கியது குறித்து கேட்டனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நண்பர்கள் பழம்பதியை தாக்கினர். பழம்பதிக்கு அவரிவாள் வெட்டு விழுந்தது. இதனையடுத்து அவர் அலறி சத்தம்போட்டார்.

    சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. வெட்டுக்காயங்களுடன் கிடந்த பழம்பதியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. மேலும் வாலிபர்களிடம் இருந்து பறித்த மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனையும் பழம்பதி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவற்றை மீட்டு வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×