search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆன்-லைனில் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்ய தடை: ஐகோர்ட்டு உத்தரவு
    X

    ஆன்-லைனில் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்ய தடை: ஐகோர்ட்டு உத்தரவு

    மத்திய அரசு சட்டம் கொண்டு வரும் வரை ஆன்-லைனில் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #HighCourt #OnlineMedicineSale
    சென்னை:

    வீட்டு வாசலுக்கு வந்து கொடுக்கப்படுவதால், ஆன்-லைன் மூலம் பொருட்கள் வாங்கும் பழக்கம் பொதுமக்களிடம் அதிகரித்து வருகிறது.

    இதனால், தனியார் நிறுவனங்கள் ஆன்-லைன் வர்த்தகத்தில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. செல்போன், ஆடைகள், காலணிகள், மளிகை சாமான்கள் மட்டுமல்லாமல், இட்லி தோசையும் ஆன்-லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

    அந்த வகையில், இப்போது மருந்து, மாத்திரைகளும் விற்பனைக்கு வந்து விட்டது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு மருந்தாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது. அதில், ‘ஆன்லைன் மூலம் மருந்து, மாத்திரைகளை தனியார் நிறுவனங்கள் பல விற்பனை செய்கின்றன. இதை அனுமதித்தால், போலியான, காலாவதியான மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்து விடுவர். இது பொதுமக்களுக்கு மிகப்பெரிய தீங்கு ஏற்படுத்தும்.

    ஆன்லைன் மூலம் மருந்துக்களை விற்பனை செய்ய சட்டப்படியாக உரிமம் எதுவும் பெறாமலேயே பல நிறுவனங்கள் செயல்படுகின்றன.

    டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல், மருந்து, மாத்திரை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். எனவே, ஆன்லைன் மூலம் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை கடந்த மாதம் விசாரித்த நீதிபதி மகாதேவன், முறையான உரிமம் இல்லாமல், ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய தனியார் நிறுவனங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.


    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் மாசிலாமணி, ‘டாக்டரின் பரிந்துரை இல்லாமல், அதாவது டாக்டர் தரும் மருந்து சீட்டு இல்லாமல், எந்த ஒரு மாத்திரை, மருந்துகளும் கொடுக்கக்கூடாது என்று மருத்துவ கவுன்சில் விதி உள்ளது. அப்படியிருக்கும் போது, சாதாரண பொருட்களை வாங்குவது போல, எப்படி மருந்தை பொது மக்கள் வாங்க முடியும்? அந்த மருந்து விற்பனையை தனியார் நிறுவனங்கள் எப்படி மேற்கொள்ள முடியும்? அதுமட்டுமல்ல, மருந்து விற்பனை செய்வதற்கும் முறையான உரிமம் வாங்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆன்-லைன் நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் வாதிட்டனர். டாக்டர்கள் தரும் மருந்து சீட்டை, ஸ்கேன் செய்து ஆன்-லைனில் அனுப்பி மருந்துகளை பெறுகின்றனர். இந்த மருந்துகளை பரிந்துரை செய்ய டிஜிட்டல் ரைட்டிங்பேடும் டாக்டர்களிடம் உள்ளது என்று வாதிட்டனர்.

    மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ஆன்-லைனில் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கும் சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, பொதுமக்களின் கருத்தை கேட்டறிந்த பின்னர், அந்த சட்ட வரைவு மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து, சட்டமாக கொண்டு வரப்படும்’ என்றார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த 10-ந் தேதி உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் தீர்ப்பை நீதிபதி இன்று பிறப்பித்தார்.

    ஆன்-லைனில் டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்ய முடியாது. ஆன்-லைன் மருந்து விற்பனை செய்ய அனுமதி வழங்குவதற்கு மத்திய அரசு சட்டம் கொண்டு வரவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த சட்டத்தை மத்திய அரசு விரைவாக கொண்டு வர வேண்டும். ஜனவரி 31-ந்தேதிக்குள் சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சட்டம் நடைமுறைக்கு வரும் வரை ஆன்-லைனில் மருந்து விற்பனை செய்யக்கூடாது. ஆன்-லைனில் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது’ என்று நீதிபதி கூறியுள்ளார்.  #HighCourt #OnlineMedicineSale
    Next Story
    ×