search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பகோணம் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலுக்குள் மழை நீர் புகுந்துள்ளதை படத்தில் காணலாம்.
    X
    கும்பகோணம் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலுக்குள் மழை நீர் புகுந்துள்ளதை படத்தில் காணலாம்.

    புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் விடிய, விடிய கனமழை- நிவாரண பணிகள் பாதிப்பு

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்களை மீண்டும் அவதிக்குள்ளாக்கும் வகையில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. #GajaCyclone #DeltaDistricts #HeavyRain
    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய கஜா புயல் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களை சூறையாடி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தியது.

    63 பேரை பலி வாங்கிய அந்த புயல் லட்சக்கணக்கான வீடுகள், மரங்கள், தொலைத்தொடர்பு இணைப்புகள், மின்சார இணைப்புகளை சீர்குலைத்து போட்டு விட்டது. இதனால் டெல்டா மாவட்ட மக்கள் வாழ்வாதரங்களை இழந்து தவித்து வருகிறார்கள்.

    புயல் நிவாரண மற்றும் சீரமைப்புக்கு ரூ.1000 கோடியை ஒதுக்கியுள்ள தமிழக அரசு குடிநீர், உணவு சப்ளை, மின் இணைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகளை செய்து வருகிறது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் டெல்டா மாவட்டங்களில் முற்றுகையிட்டு உதவி செய்து வருகிறார்கள். டெல்டா மாவட்டத்தை மீட்டெடுக்க ரூ.15 ஆயிரம் கோடி தேவை என்று பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனு கொடுத்துள்ளார்.

    இதையடுத்து கஜா புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய அரசின் குழு வந்துள்ளது. ஆனால் மத்திய அரசு நிதி தருவதற்கு சில நாட்கள் ஆகும் என்பதால் மாநில அரசும், தன்னார்வத் தொண்டு அமைப்புகளும் நிவாரணப் பணிகளை முழு வீச்சில் செய்து வருகின்றன.

    இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்களை மீண்டும் அவதிக்குள்ளாக்கும் வகையில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

    நேற்று காலை முதல் விடிய விடிய பலத்த மழை பெய்ததால் புயல் சேதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மீள முடியாத நிலையை அடைந்துள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் முடங்கி உள்ளது. இதில் இருந்து அவர்கள் மீள இன்னும் பல நாட்களாகும் என்ற அவல நிலை உருவாகி உள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் நேற்று கொட்டும் மழையிலும் மின்சார ஊழியர்கள் புயலில் சாய்ந்த மின் கம்பங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். நெல்லை- திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த மின் ஊழியர்களும் இப்பணியில் ஈடுபட்டனர். தொடர்மழை நீடிப்பதால் நாகை முதல் வேதாரண்யம் வரை பல இடங்களில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது.

    அதனை பொருட்படுத்தாமல் 200-க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் மின் கம்பங்களை நட்டு மின் இணைப்பை வழங்க முயற்சித்து வருகின்றனர்.

    திருவாரூரில் தொடர்மழையால் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி இருக்கும் காட்சி.


    தொடர்மழை பெய்து வருவதால் பல வீடுகள் சேதமாகி இடிந்து விழும் அபாய நிலை அதிகரித்துள்ளது. வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாரசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவில் உள்பட பல கோவில்களிலும் மழைநீர் புகுந்து குளம்போல் தேங்கி உள்ளது.

    நாகை மாவட்டம் கோடியக்காட்டில் உள்ள வனவிலங்கு சரணாலயம் புயல் மற்றும் மழையால் உருகுலைந்து போய் விட்டது. அங்கு வசித்த மான்கள், குரங்குள் உள்ளிட்ட விலங்குகள் பல உயிரிழந்து விட்டன. இதனால் அங்கு நோய் பரவும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.

    நாகை மாவட்டத்தை பொறுத்தவரை மீன்பிடித் தொழில் பிரதானமானது. அங்கு புயல் மற்றும் மழையால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் சேதமாகி விட்டன. இதனால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டு மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். நாகை, வேதாரண்யம், ஆறு காட்டுத்துறை, வெள்ளப் பள்ளம், பூம்புகார், தரங்கம்பாடி, புதுபட்டினம் உள்ளிட்ட பல மீனவ கிராமங்களில் ஏராளமான வீடுகள் மழையில் சேதமாகி விட்டன. அவர்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

    இதேபோல் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் முகாம் வசதி குறைவாக உள்ளதால் மக்கள் சேதமான வீடுகளில் தங்கும் சூழ்நிலை நிலவுவதால் அவர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லை. தொழிலாளர்கள் எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர். மாணவ- மாணவிகள் புத்தகம், நோட்டு சேதமாகி விட்டதால் பள்ளிக்கு சென்று மீண்டும் படிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    மழையில் பல பள்ளி கட்டிடங்களும் சேதமாகி விட்டன. எனவே மழை நின்ற பின்னரும் அந்த பள்ளிகளில் சென்று படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, வலங்கைமான், நீடாமங்கலம், பேரளம், குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயி அச்சத்தில் உள்ளனர்.

    டெல் மாவட்டங்களில் புயல் மழைக்கு பல லட்சம் தென்னை மரங்கள், வாழைகள், கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களும் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. அரசு நிவாரண பொருட்களை வழங்கிவரும் நிலையில் அவைகளை சென்று வாங்க முடியாத அளவுக்கு மழை பெய்து வருகிறது.




    பட்டுக்கோட்டையில் 9 நாட்களாக மின்சாரம் இல்லாததால் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன. இதற்கிடையே தொடர்மழை பெய்து குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்பதால் குடைபிடித்து கொண்டு மக்கள் சாப்பிடும் நிலை ஏற்பட்டது. பல குடும்பத்தினர் தூங்க இடமின்றி தவித்து வருகின்றனர்.

    டெல்டா மாவட்டங்களில் மீட்பு பணிகளை மழை முடங்கி விட்டதால் நிலைமை எப்போது சீராகுமோ? என்று மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சேதம் அடைந்த வீடுகளுக்கு அரசு 5 லட்சம் தார்ப்பாய்களை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

    டெல்டா மாவட்டங்களில் நேற்று காலை முதல் இன்றும் தொடர் மழை பெய்து வருகிறது. இது மக்களை மேலும் அச்சமடைய வைத்துள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டத்திற்கு உட்பட்ட அறந்தாங்கி, ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், கந்தர்வக்கோட்டை, ஆதன கோட்டை, சோளகம்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் இன்று காலை வரை இடைவிடாமல் மழை பெய்தது. இன்று காலை லேசான தூரலுடன் மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக மின் கம்பங்கள் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை பெய்து கொண்டிருந்த போதிலும் அதனை பொருட்படுத்தாமல் மின் ஊழியர்கள் பலர் தங்களது பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

    பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து தன்னார்வலர்கள் நிவாரண பொருட்களை கொண்டு வருகின்றனர். ஆனால் மழை பெய்வதால் பொருட்களை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    உணவு சமைத்து கொடுப்பதற்காக வந்தவர்கள் தங்குவதற்கு இடமில்லாத சிரமமும் ஏற்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்கள் தற்காலிக கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர்.

    மழை காரணமாக சீரமைப்பு, நிவாரண பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால் புயல் பாதித்த பகுதிகளில் மின்சாரம் குடிநீர் விநியோகிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, மருங்காபுரி பகுதிகள் கஜா புயலால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்தன. அங்கு 80 சதவீதம் அளவுக்கு சீரமைப்பு பணிகள் முடிவுற்றுள்ளது. மீதி பணிகள் நடைபெற்று வந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் அந்த பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    தொடர் கனமழை காரணமாக நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.

    இதே போல் தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.

    திருச்சி, தர்மபுரி மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  #GajaCyclone #DeltaDistricts #HeavyRain
    Next Story
    ×