search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கி கொள்ளை முயற்சி: நேபாளத்தைச் சேர்ந்த 2 வாலிபர்கள் கைது
    X

    வங்கி கொள்ளை முயற்சி: நேபாளத்தைச் சேர்ந்த 2 வாலிபர்கள் கைது

    வங்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நேபாளத்தைச் சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery #Bankrobbery

    போரூர்:

    கடந்த 1-ந்தேதி ராமாவரம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது.

    சம்பவம் நடந்த அன்று அதிகாலை 3 மணிக்கு கொள்ளையர்கள் வங்கியின் அலாரத்தை துண்டித்தனர். மும்பையில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் இதை கண்காணித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து ராமாவரம் போலீசார் அந்த வங்கிக்கு சென்றனர். போலீசை கண்டதும் கொள்ளை கும்பல் தப்பி ஓடி விட்டது. அவர்கள் விட்டுச் சென்ற கியாஸ் சிலிண்டர், கட்டர் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்கள்.

    வங்கி கொள்ளை முயற்சி குறித்து ராமாவரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது அண்ணா நகரில் உள்ள ஒரு தனியார் மதுபான பாரில் பணிபுரிந்த 2 பேருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கணேஷ் போகத் (21), நாரத் போக் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள், சென்னையில் காவலாளிகளாக வேலை பார்க்கும் நண்பர்கள் வீட்டில் தங்கி இருந்தது தெரிய வந்தது.

    நேபாளத்தில் உள்ள வங்கி கொள்ளையன் ஒருவன் தூண்டுதலால் இதை செய்ய முடிவு செய்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 4 பேர் தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    வளசரவாக்கம் போலீஸ் உதவி கமி‌ஷனர் சம்பத், ராமாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய கொள்ளையர்களின் கூட்டாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர். #Robbery #Bankrobbery

    Next Story
    ×