search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபாநாயகர் தனபாலை நீக்க வேண்டும்- சட்டப்பேரவை  செயலருக்கு கருணாஸ் கடிதம்
    X

    சபாநாயகர் தனபாலை நீக்க வேண்டும்- சட்டப்பேரவை செயலருக்கு கருணாஸ் கடிதம்

    சபாநாயகர் தனபாலை நீக்க வேண்டும் எனக்கோரி சட்டப்பேரவை செயலாளருக்கு கருணாஸ் எம்எல்ஏ கடிதம் எழுதி உள்ளார். #KarunasMLA #SpeakerDhanapal

    சென்னை:

    சாதி மோதலைத்தூண்டும் வகையிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் போலீஸ் அதிகாரிகளை கடுமையாக தாக்கிப் பேசிய கருணாஸ் எம்.எல்.ஏ. கைதாகி ஜாமீனில் விடுதலை ஆனார்.

    கருணாஸ் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்றவர் என்பதால் அவர் மீது கட்சிதாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சபாநாயகர் தனபால் முடிவு செய்துள்ளார். இதற்காக அரசு கொறடா ராஜேந்திரன் சபா நாயகருக்கு பரிந்துரை செய்துள்ளார். அதை ஏற்று கருணாஸ் எம்.எல்.ஏ.வுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்ப உள்ளார்.

    இந்தநிலையில் சபா நாயகர் தனபாலை நீக்க கோரி கருணாஸ் சார்பில் சட்டசபை செயலாளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    சபாநாயகர் தனபால் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார். இதனால் சட்டமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்படுகிறார்கள். சட்ட சபை விதிகளை மீறி சபா நாயகர் செயல்படுகிறார்.

    ‘‘நான் தமிழக சட்ட சபையில் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. வாக இருக்கிறேன். தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட பிரிவு 68 மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்ட 179 (சி) விதியின் கீழ் சபாநாயகர் தனபாலை பதவிநீக்கம் செய்ய வேண்டும்.


    மேற்கண்ட சட்ட பிரிவுகளின்படி அவருக்கு 14 நாட்களில் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

    சட்டசபையை உடனே கூட்டி சபா-நாயகரை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு கூறியுள்ளார்.

    கடிதத்தின் நகல் சபாநாயகருக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. கருணாஸ் சார்பில் அவரது வக்கீல்கள் சட்டசபை செயலாளரிடம் மனுவை அளித்துள்ளனர்.#KarunasMLA #SpeakerDhanapal

    Next Story
    ×