search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் 18-ந்தேதி திமுக ஆர்ப்பாட்டம்
    X

    தமிழக அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் 18-ந்தேதி திமுக ஆர்ப்பாட்டம்

    தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வருகிற 18-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.

    பொருளாளர் துரைமுருகன், துணை பொதுச் செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஜெ.அன்பழகன், பி.கே.சேகர்பாபு, மா. சுப்பிரமணியம், மாதவரம் சுதர்சனம், ஆவடி நாசர், தா.மோ. அன்பரசன், காஞ்சீபுரம் சுந்தர், பொன்முடி, கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 63 மாவட்ட செயலாளர்கள் மற்றும் 88 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஒவ்வொரு தொகுதியிலும் கடுமையாக உழைக்க வேண்டும், அதற்கான ஆக்கப்பூர்வமான பணிகளில் மாவட்ட செயலாளர்கள் ஈடுபட வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது.

    மேலும் தற்போது குட்கா ஊழல் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் பற்றி மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது.

    வாக்காளர் பட்டியலில் தி.மு.க. உறுப்பினர்கள் பெயர்கள் விடுபடாமல் இருப்பதற்கு நாளை நடைபெறும் சிறப்பு முகாமில் ஒவ்வொரு பூத்திலும் தி.மு.க. பிரதிநிதிகள் அமர்ந்து வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    இது தவிர அரசியல் நிகழ்வுகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    * தமிழக அரசின் ஊழலை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வருகிற 18-ந்தேதி தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.

    * காவி மயமாக்கும் மத்திய பா.ஜ.க.வின் கனவுகளை வீழ்த்துவோம்.

    * வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்தும் பணியை பின்பற்றுவோம்.

    * காவிரி நீர் கடைமடை பகுதிக்கு செல்லவும், கடலில் கலப்பதை தடுக்கவும் நடவடிக்கை தேவை.

    * பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தாமதிக்காமல் விடுதலை செய்ய வேண்டும்.

    * பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து 10-ந்தேதி நடைபெறும் பந்த் வெற்றி பெற ஒத்துழைப்போம்.

    * குட்கா ஊழலுக்கு காரணமான அமைச்சரையும், டி.ஜி.பி.யையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



    தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    கூட்டத்தில் வேலூர் மாவட்டம் சார்பில் தேர்தல் நிதியாக ரூ.1 கோடி மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. #DMK #MKStalin

    Next Story
    ×