search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
    X

    ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

    தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்ந்து குறைந்து வருகிறது.
    ஊட்டி:

    மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி சர்வதேச அளவில் புகழ் பெற்றது. ஊட்டியில் ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா, அரசு அருங்காட்சியகம், தொட்டபெட்டா மலைசிகரம், தேயிலை பூங்கா, மூலிகை பண்ணை, ரெயில் நிலையம், படகு இல்லம், கேர்ன்ஹில் வனப்பகுதி உள்ளது.

    ஊட்டி வெளிவட்டாரங்களில் பைன் பாரஸ்ட், சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் காணப்படுகின்றன. சீசன் காலங்கள், தொடர் மற்றும் கோடை விடுமுறை காலங்களில் குளு, குளு காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை அழகை ரசிக்கவும் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகிறார்கள்.

    இதனால் விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலும் சீசன் இல்லாத காலங்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமான அளவில் இருக்கும். தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கடந்த சில வாரங்களாக ஊட்டி, கூடலூர் பகுதியில் தொடர் மழை பெய்தது.

    இதனால் பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தது. மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் அடிக்கடி மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டது. மேலும் கடுங்குளிர் நிலவியது.

    இதனால் விடுமுறை காலங்களில் ஊட்டிக்கு சுற்றுலா வரக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. தாவரவியல் பூங்கா, ரோஜா மலர் பூங்கா, படகு இல்லம் உள்பட பல முக்கிய சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மேலும் கமர்சியல், எட்டின்ஸ், சேரிங்கிராஸ் உள்ளிட்ட சாலைகளில் உள்ளூர் வாகனங்கள் மட்டுமே இயக்கப் படுகிறது.

    சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் பெருமளவு இல்லாததால் சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி இல்லை. தாவரவியல் பூங்காவில் மட்டும் கணிசமான அளவில் சுற்றுலா பயணிகள் வந்து இருந்தனர்.

    ஆனால் ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அடியோடு குறைந்து இருந்தது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்ந்து குறைந்து காணப்படுவதால் தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் போதிய வியாபாரம் இல்லாமல் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் தாவரவியல் பூங்காவுக்கு வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை சராசரியாக 2 ஆயிரத்து 700 சுற்றுலா பயணிகள் மட்டுமே வந்துள்ளனர். கடந்த 3 நாட்களில் இதே எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் மட்டுமே வருகை தந்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.

    இதனிடையே ஊட்டியில் நேற்று மதியம் 2 மணிக்கு சாரல் மழை பெய்தது. இதனால் ஊட்டி சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, நகராட்சி மார்க்கெட், மத்திய பஸ் நிலையம், ஏ.டி.சி., லோயர் பஜார், மெயின் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் குடைகளை பிடித்தபடி பொதுமக்கள் நடந்து சென்றனர். 
    Next Story
    ×