search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் ஜெயிலில் ஆயுள் தண்டனை கைதி தூக்குப்போட்டு தற்கொலை
    X

    வேலூர் ஜெயிலில் ஆயுள் தண்டனை கைதி தூக்குப்போட்டு தற்கொலை

    வேலூர் ஆண்கள் ஜெயிலில் ஆயுள் தண்டனை கைதி ஷூ லேஸ்களை சேகரித்து வைத்து, அதை கயிறாக தயாரித்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
    வேலூர்:

    வேலூர் தொரப்பாடியில் ஆண்கள் மத்திய ஜெயில் உள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    ஆற்காடு தாலுகா மேலநேச்சபாக்கம் நந்தபேட்டை தெருவை சேர்ந்த பச்சையப்ப பிள்ளை மகன் கஜேந்திரன் (வயது 44), கடந்த 1996-ம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் அவருக்கு 1998-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. வேலூர் ஆண்கள் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் கடந்த 2004-ம் ஆண்டு பரோலில் சென்றார். பின்னர் அவர் தலைமறைவாகி விட்டார். போலீசார் அவரை தேடி வந்தனர். இதையடுத்து 2014-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு மீண்டும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அறையின் அருகே உள்ள கழிவறைக்கு சென்றார். வெகுநேரம் ஆகியும் வெளியே வராததால் உடன் இருந்த கைதி ஏசுபாதம் என்பவர் அதிகாலை 4.15 மணி அளவில் சென்று கழிவறையில் பார்த்த போது கஜேந்திரன் ஷூ லேஸ்களால் தயார் செய்திருந்த கயிற்றை ஜன்னலில் கட்டி தூக்குப்போட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த ஏசுபாதம் அவரை உடனடியாக மீட்டு சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து சிறையில் உள்ள டாக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டாக்டர் பரிசோதித்தபோது கஜேந்திரன் ஆபத்தான நிலையில் இருந்ததால் அவரை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக உடனடியாக கொண்டு செல்ல பரிந்துரைத்தார்.

    இதையடுத்து ஜெயில் காவலர்கள் பாதுகாப்புடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது கஜேந்திரன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சிறை அலுவலர் ராஜேந்திரன் பாகாயம் போலீசில் புகார் செய்தார். கஜேந்திரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள ஷூ லேஸ்களால் ஆன கயிறை பயன்படுத்தி உள்ளார்.

    ஜெயிலில் கைதிகளால் தயாரிக்கப்படும் ஷூ தொழிற்சாலை உள்ளது. இங்கு பல கைதிகள் பணியாற்றி வருகின்றனர். தினமும் 750 ஜோடி ஷூக்கள் தயாரிக்கப்படுகிறது. இதில் கஜேந்திரனும் பணிபுரிந்துள்ளார். அவர் ஷூக்களை கால்களில் இறுக்க கட்டிக் கொள்ள பயன்படுத்தும் லேஸ்களை அவ்வப்போது திருடி தனது அறையில் சேகரித்து வைத்துள்ளார். ஷூ லேஸ்களை ஒன்றாக இணைத்து கயிறுபோல் தயாரித்து தற்கொலை செய்து கொண்டது ஜெயில் அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஜெயில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×