search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விளாத்திகுளம் அருகே புதுப்பெண் தற்கொலை குறித்து உதவி கலெக்டர் விசாரணை
    X

    விளாத்திகுளம் அருகே புதுப்பெண் தற்கொலை குறித்து உதவி கலெக்டர் விசாரணை

    விளாத்திகுளம் அருகே திருமணமாகி 10 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் வீட்டார் தொடர்ந்து கொடுமைபடுத்தி வந்ததால் மனமுடைந்த புதுப்பெண் திருமணமாகி சுமார் 10 மாதங்களே ஆன நிலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கோவில்பட்டி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். 

    விளாத்திகுளம் அருகே உள்ள ஈவேலாயுதபுரத்தை சேர்ந்த கணேசன் மகள் சோனியா(வயது22). இவருக்கும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகில் உள்ள தும்ப சின்னம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜ் என்ற மரிய வியாகுலனுக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திருமணம் நடந்தது. 

    திருமணம் முடிந்த பின் புதுமண தம்பதிகள் ராஜ் வீட்டில் வசித்து வந்தனர். ஒரு மாதத்தில் பிரிட்ஜ் போன்ற மின் சாதனங்கள் மற்றும் கூடுதலாக வரதட்சணை கேட்டு கணவரும், அவருடய குடும்பத்தினரும் சோனியாவை கொடுமைபடுத்தி வந்தனர். தொடர்ந்து கணவர் குடும்பத்தினர் கொடுமை படுத்தியதால் சோனியா அடிக்கடி பெற்றோர் வீட்டுக்கு வந்து தங்கி சென்றுள்ளார். 

    கணவர் குடும்பத்தினரின் கொடுமை அதிகரித்ததால், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை பெற்றோர் அழைத்து வந்து ஈவேலாயுதபுரத்தில் உள்ள தங்களது வீட்டில் தங்க வைத்து இருந்தனர். கணவர் குடும்பத்தினரின் கொடுமையால் மனமுடைந்த நிலையில் சோனியா இருந்துள்ளார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். வீட்டில் தனியாக இருந்த சோனியா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    வீடு திரும்பிய பெற்றோர் அவருடைய உடலை பார்த்து கதறி அழுதனர். இது தொடர்பாக சூரங்குடி போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது. அந்த போலீசார், அவருடைய உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி உதவி கலெக்டர் (பொறுப்பு) செழியன் விசாரணை நடத்தி வருகிறார். 

    திருமணமாகி 10 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×