search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    95-வது பிறந்தநாள்: தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு புதுவை சட்டசபை வாழ்த்து
    X

    95-வது பிறந்தநாள்: தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு புதுவை சட்டசபை வாழ்த்து

    95-வது பிறந்தநாள் கொண்டாடிய தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு புதுவை சட்டசபை சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. #Karunanidhi #PuducherryAssembly
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் சபாநாயகர் வைத்திலிங்கம் பேசியதாவது:-

    1955-ம் ஆண்டு முதல் தமிழக சட்டமன்றத்தின் உறுப்பினராக தொடர்ந்து கலைஞர் கருணாநிதி பதவி வகித்து வருகிறார். 1967-ம் ஆண்டு முதல்முறையாக முதல்-அமைச்சராகவும் ஆனார். 5 முறை கலைஞர் தமிழக முதல்-அமைச்சராக இருந்துள்ளார். தமிழுக்கும், தமிழர்களுக்காகவும் பல்வேறு வகைகளில் பாடுபட்டுள்ளார். 95-வது பிறந்தநாளை கொண்டாடும் தலைவர் கலைஞருக்கு புதுவை சட்டசபை தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது என தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர் சிவா பேசியதாவது:- எங்கள் தலைவர் கலைஞருக்கு புதுவை சட்டசபை வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழுக்காகவும், தமிழர் நலனுக்காகவும் இறுதி மூச்சுவரை போராடுபவர். எங்கள் தலைவர் 13-வது முறை சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து வருகிறார்.

    எழுத்தாற்றல், பேச்சாற்றால், அரசியல், திரைத்துறை என அனைத்து துறையிலும் தனி முத்திரை பதித்தவர். உலக தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவராக திகழ்பவர் கலைஞர். 63 ஆண்டுகளாக தமிழக அரசியலில் கோலோச்சி வருபவர். இத்தகைய தலைவரை இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில்கூட பார்க்க முடியாது.

    தனது ஆட்சிக்காலத்தில் தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவந்தார். இந்திய நாட்டின் பிரதமர், ஜனாதிபதியை உருவாக்கியவர். தற்போது உடல்நலம் குன்றி இருந்தாலும் தன் பிறந்தநாளில் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். அவருக்கு சட்டசபை வாழ்த்து தெரிவித்ததற்கு மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.


    இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி, 5 முறை தமிழக முதல்-அமைச்சராகவும், 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், நீண்ட பல ஆண்டாக தி.மு.க. தலைவராகவும் பதவி வகித்து வருபவர் கலைஞர். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர். 95-வது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். நாட்டு மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் தலைவர் கலைஞர். அனைத்து துறைகளிலும் பல அளப்பறியா சாதனைகளை செய்தவர். தமிழர் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டவர். 3 முறை தொடர்ந்து எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சரான போதும் தனது கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருந்து மீண்டும் முதல்-அமைச்சர் ஆனவர். நாட்டின் பிரதமர்களை உருவாக்கியவர். அவருக்கு புதுவை மக்களின் சார்பில் வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #Karunanidhi #PuducherryAssembly
    Next Story
    ×