search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மறியலில் ஈடுபட்டவர்கள் ஆவேசமாக கோ‌ஷமிட்டனர்.
    X
    மறியலில் ஈடுபட்டவர்கள் ஆவேசமாக கோ‌ஷமிட்டனர்.

    மதுரையில் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் கைது

    மதுரையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர், மாதர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
    மதுரை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய தமிழக அரசு பதவி விலக வேண்டும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை குழுவை கலைத்து விட்டு பணியில் உள்ள நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரையில் இன்று போராட்டங்கள் நடத்தப்பட்டன.

    பெரியார் பஸ் நிலையம், கட்டபொம்மன் சிலை அருகே இந்திய ஜனநாயக மாணவர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

    இதில் பங்கேற்றவர்கள், முதல்-அமைச்சர் உருவப்படத்தை எரிக்க முயன்றனர். அப்போது போலீசார் அதனை பறித்தனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 23 பேரை கைது செய்தனர்.

    அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து கோ‌ஷங்களை எழுப்பினர். தூத்துக்குடி சம்பவத்திற்கு காரணமான கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பலியானோர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும், பாதிக்கப்பட்டோருக்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    சாலையில் அமர்ந்து கோ‌ஷமிட்டவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கிச்சென்றனர்.

    இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் செல்வா, தலைவர் வேல் தேவர், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கோபிநாத், மாதர் சங்க மாவட்ட தலைவர் ராஜேசு வரி உள்பட பலர் மறியலில் கலந்து கொண்டனர். #Tamilnews
    Next Story
    ×