search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் நடந்த அமைச்சர்கள் குழு கூட்டத்தில் சர்க்கரை மீதான மேல் வரி விதிப்பு குறித்து ஆலோசனை
    X

    டெல்லியில் நடந்த அமைச்சர்கள் குழு கூட்டத்தில் சர்க்கரை மீதான மேல் வரி விதிப்பு குறித்து ஆலோசனை

    டெல்லியில் நடந்த அமைச்சர்கள் குழு கூட்டத்தில் சர்க்கரை மீதான மேல் வரி விதிப்பு குறித்து ஆலோசனை நடைபெற்றது.
    சென்னை:

    சர்க்கரை மீது மேல்வரி விதிப்பது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழு கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது.

    கூட்டத்தில், மீன்வளம் மற்றும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் அரசு முதன்மைச் செயலாளர் கா. பாலச்சந்திரன், முதன்மைச் செயலாளர், மற்றும் வணிகவரி ஆணையர் சோமநாதன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    4.5.2018 அன்று காணொலி காட்சி மூலம் நடைபெற்ற 27வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற கூட்டத்தின்போது சர்க்கரை மீதான 5% ஜி.எஸ்.டி. வரி தவிர்த்து கிலோ ஒன்றுக்கு ரூ.3 மேல்வரி விதிப்பதற்கான மத்திய அரசின் கருத்துரு விவாதிக்கப்பட்டது. இந்த மேல்வரி விதிக்கும் முறையானது ஜி.எஸ்.டி. சட்டத்தின் கொள்கைக்கு மாறாக உள்ளதால் தமிழ்நாட்டிற்கு ஏற்புடையதாக இல்லை என்று அமைச்சர். டி.ஜெயக்குமார் அன்றையக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

    தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களும் சர்க்கரை மீது மேல்வரி விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக, இது தொடர்பாக மேலும் ஆய்வு செய்யும் பொருட்டு ஜி.எஸ்.டி. மன்றமானது அமைச்சர்கள் குழு ஒன்றினை 4.5.2018 அன்று ஏற்படுத்தி உள்ளது. இந்தக் குழுவில் தமிழ்நாடு, அசாம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் அமைச்சர்கள் உள்ளடங்குவர். இந்தக் குழுவானது, சர்க்கரை மீதான மேல்வரி விதிப்பது மற்றும் அது தொடர்பான இனங்கள் குறித்து விவாதித்து அறிக்கை ஒன்றினை ஜி.எஸ்.டி. மன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

    புதுடெல்லியில்14.5.2018 அன்று நடைபெற்ற அமைச்சர்கள் குழு கூட்டத்தில் சர்க்கரை மீது 5% ஜி.எஸ்.டி. வரி தவிர்த்து கிலோ ஒன்றுக்கு ரூ.3 மேல்வரி விதிப்பதற்கு அரசியல் சாசன கூறுகள் அனுமதிக்கின்றனவா என்பது குறித்து மத்திய சட்ட அமைச்சகத்தின் கருத்தினை ஜி.எஸ்.டி. மன்ற செயலகமானது பெற்று வழங்க வேண்டுமென அமைச்சர் டி.ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.

    மேலும், ஜி.எஸ்.டி அமலாக்கத்திற்கு முன்பு இருந்த சர்க்கரை வளர்ச்சி நிதியில் வசூலிக்கப்பட்ட தொகை மற்றும் எந்தெந்த காரணத்திற்காக, எந்தெந்த மாநிலத்திற்காக, எவ்வளவு நிதி வழங்கப்பட்டது. குறித்தான விவரத்தினையும் மத்திய அரசின் நுகர்வோர் நடவடிக்கைகள், உணவு மற்றும் பொது விநியோக துறையிடமிருந்து ஜி.எஸ்.டி. மன்ற செயலகமானது பெற்று இக்குழுவிற்கு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

    இந்த விவரங்களின் அடிப்படையில், சர்க்கரை மீது மேல்வரி விதிப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. அமைச்சர்கள் குழுவின் அடுத்தக் கூட்டத்தினை வருகின்ற ஜூன் மாதம் 3-ந்தேதி நாள் நடத்துவதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    Next Story
    ×