search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்- வருமான வரித்துறை நடவடிக்கை
    X

    ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்- வருமான வரித்துறை நடவடிக்கை

    வெளிநாட்டில் வாங்கிய சொத்துகளின் விவரங்களை வருமான வரிக்கணக்கில் காட்டவில்லை என்று குற்றம் சுமத்தி கருப்பு பண தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி, மகன் மற்றும் மருமகள் மீது சிறப்பு கோர்ட்டில், வருமான வரித்துறை புகார் மனுவை தாக்கல் செய்துள்ளது.
    சென்னை:

    காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய மந்திரியாக இருந்தவர் ப.சிதம்பரம். இவரது மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் சொத்துகள் வாங்கியுள்ளதாகவும், இந்த சொத்துகள் வாங்கிய விவரங்களை நளினி சிதம்பரம் உள்பட 3 பேரும், தங்களது வருமான வரிக்கணக்கில் காட்டவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த நிலையில், வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவரும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015-ம் ஆண்டு கருப்பு பண தடுப்புச்சட்டத்தை கொண்டு வந்தார்.

    இந்த சட்டத்தின் கீழ் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் மீது வருமான வரித்துறை குற்றம் சாட்டியது. அதாவது, இங்கிலாந்து நாட்டில், ரூ.5.37 கோடி மற்றும் ரூ.80 லட்சம் மதிப்பு கொண்ட 2 சொத்துகளும், அமெரிக்காவில் ரூ.3.28 கோடி மதிப்புள்ள சொத்தும் வாங்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்டு அவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீசு அனுப்பியது.

    இதை எதிர்த்து நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், தள்ளுபடி செய்து கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டார். இதை எதிர்த்து 3 பேரும் மேல்முறையீடு செய்தனர்.


    இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் வி.பாரதிதாசன், என்.சேஷசாயி ஆகியோர் கடந்த 3-ந்தேதி விசாரித்தனர். அப்போது, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் எதிராக வருமான வரித்துறை விசாரணை நடத்தலாம். அதேநேரம், கருப்பு பண தடை சட்டத்தின் கீழோ அல்லது வருமானவரிச் சட்டத்தின் கீழோ நடவடிக்கை எடுப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கும்போது, இந்த வழக்கு நிலுவையில் உள்ளதை நினைவில் கொள்ளவேண்டும். இந்த வழக்கிற்கு வருமான வரித்துறை முதன்மை இயக்குனர், வருகிற ஜூன் 5-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டு இருந்தனர்.

    இந்த நிலையில், கருப்பு பண தடுப்புச்சட்டத்தின் கீழ் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக புகார் மனுவை சென்னையில் உள்ள சிறப்பு கோர்ட்டில், வருமான வரித்துறை தாக்கல் செய்துள்ளது. இந்த புகார் மனுவை சிறப்பு கோர்ட்டு பரிசீலித்து ஏற்றுக்கொண்டு பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பும் என்று கூறப்படுகிறது.
    Next Story
    ×