search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்போன், முறுக்கு மீசை, கடுக்கனுக்கு தடை- அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடு
    X

    செல்போன், முறுக்கு மீசை, கடுக்கனுக்கு தடை- அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடு

    பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர்கள் 11 விதிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். முதன்மை கல்வி அலுவலர்கள் இதனை கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. #GovtSchools
    சென்னை:

    கல்லூரி மாணவர்களை போலவே, மேல்நிலைபள்ளி மாணவர்களும் முறுக்கு மீசை, காதில் கடுக்கன், ‘லோ ஹிப்’ பேன்ட், சீரற்ற முறையில் முடிவளர்த்து பள்ளிகளுக்கு வர ஆரம்பித்தனர்.

    மேலும், பள்ளி நிர்வாகங்களுக்கு தெரியாமல் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர்.

    இதையடுத்து பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர்கள் 11 விதிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். முதன்மை கல்வி அலுவலர்கள் இதனை கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கல்வித்துறையின் அந்த 11 விதிமுறைகள் வருமாறு:-

    காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வந்து சேர வேண்டும்.

    லோ ஹிப், டைட் பிட் ‘பேன்ட்’கள் அணிந்து வர அனுமதி இல்லை.

    அரைக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும். சட்டையை இறுக்கமாக அணியக்கூடாது.

    மாணவர்கள் அணியும் சட்டை நீளம் ‘டக் இன்’ செய்யும்போது வெளியில் வராத வகையில் இருக்க வேண்டும்.

    சீரற்ற முறையில் ‘இன்’ பண்ண கூடாது. கறுப்பு கலர் சிறிய ‘பக்கிள்’ கொண்ட பெல்ட் மட்டுமே அணிய வேண்டும்.

    கை, கால் நகங்கள், தலை முடி சரியான முறையில் வெட்டப்பட (போலீஸ் கட்டிங்) வேண்டும்.

    மேல் உதட்டை தாண்டாதவாறு மீசை இருப்பது அவசியம். முறுக்கு மீசை வைத்திருந்தால் கடும் நடவடிக்கை பாயும்.

    கைகளில் ரப்பர் பேண்டு, கயிறு, கம்மல், கடுக்கன், செயின் போன்றவற்றை அணிந்து வரக்கூடாது.

    பெற்றோர் கையொப்பத்துடன் வகுப்பாசிரியர் அனுமதி பெற்றுத்தான் விடுமுறை எடுக்க வேண்டும்.

    பைக், செல்போன், ஸ்மார்ட் போன் கொண்டு வர அனுமதி இல்லை. மீறினால் பறிமுதல் செய்யப்படும். திரும்ப ஒப்படைக்கப்பட மாட்டாது.

    பிறந்த நாள் என்றாலும் மாணவர்கள் சீருடையில் தான் பள்ளிக்கு வர வேண்டும்.

    இவ்வாறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ‘மாணவர்களின் ஒழுக்க நெறிமுறைகளை வளர்த்தெடுப்பதில் பள்ளிகள் பெரும்பங்கு வகிக்கின்றன. இதற்கான 11 விதிமுறைகள் குறித்து ‘பிளக்ஸ் பேனர்’கள் பள்ளிகளில் வைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    துண்டு பிரசுரங்கள் மூலமும், பெற்றோரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    பள்ளி கல்வித்துறை போல உயர்கல்வித்துறையும் மாணவ- மாணவிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

    இது தொடர்பாக கல்லூரிக் கல்வி இயக்குனர் ஜெ.மஞ்சுளா அனைத்து அரசு கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    கல்லூரிகள் நடத்தும் விழாக்கள், நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவோர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் தாங்கள் சார்ந்த அரசியல் கட்சி அல்லது இயக்கங்களின் கொள்கைகளை தங்களின் உரைகளில் கலந்து பேசுவதாக தெரிய வருகிறது.

    இத்தகைய நிகழ்வுகள் மாணவர்களின் கல்விக்கு இடையூறாக அமையும். மேலும், இந்நிகழ்ச்சிகளால் மாணவர்களின் கல்வியும், ஆராய்ச்சி மனப்பான்மையும் பாதிக்கப்படும்.

    எனவே, தங்களின் கல்லூரியில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கு பெறுவோர் அரசியல் கட்சிகளின் கொள்கைகளையும் பிற இயக்கங்களின் கருத்துக்களை பரப்புவதையும், விவாதிப்பதையும் தவிர்க்க வேண்டும் என்றும் அவ்வாறான விழாக்களுக்கு அனுமதி மறுக்க வேண்டும் என்றும் தங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    மேலும் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அரசு உதவி பெறும், சுயநிதி கல்லூரிகளுக்கு இப்பொருள் தொடர்பாக உரிய அறிவுரைகள் சுற்றறிக்கை வாயிலாக அளிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    நடிகர்கள் ரஜினி, கமலை குறி வைத்தே உயர் கல்வித்துறை இந்த கட்டுப்பாட்டை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் கமல்ஹாசன் “மக்கள் நீதி மய்யம்” எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி ஆதரவு திரட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த மாதம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள அவர் இளைஞர்களை குறி வைத்து ஆதரவு திரட்டி வருகிறார்.

    கடந்த சில மாதங்களாக கமல்ஹாசன் கல்லூரி மற்றும் நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் கலந்து கொண்டு பேசி வருகிறார். வரும் நாட்களில் மேலும் சில கல்லூரிகளில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேச அவர் சம்மதித்துள்ளார்.

    கல்லூரிகளில் பேசும் போது மத்திய-மாநில அரசுகளை கடுமையாக விமர்சிப்பதை நடிகர் கமல்ஹாசன் வழக்கத்தில் வைத்துள்ளார். இது தவிர தனது “மக்கள் நீதி மய்யம்” கட்சிக்கு ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளையும் கமல்ஹாசன் மேற்கொள்வதுண்டு.

    நடிகர் ரஜினி இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு பல்கலைக்கழக விழாவில் கலந்து கொண்டு பேசும் போது தனது அரசியல் கட்சி பற்றி பேசினார். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கமல், ரஜினி இருவரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களை குறி வைத்து செயல்படுவது பற்றி சிலர் அரசிடம் புகார்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்தே அரசியல் கட்சி சார்புடையவர்களை தடுத்து நிறுத்தும் வகையில் இந்த சுற்றறிக்கையை உயர்கல்வித் துறை அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.

    பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை கண்டிப்பாக அனைத்துக் கல்வி நிறுவனங்களும் அமல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் ஒழுக்கத்தை ஏற்படுத்த உதவும் என்று பெற்றோர்கள் மகிழ்ச்சியும் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.  #GovtSchools
    Next Story
    ×