search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரி உரிமையாளர்கள் 7-ந்தேதி முதல் வேலைநிறுத்தம்
    X

    லாரி உரிமையாளர்கள் 7-ந்தேதி முதல் வேலைநிறுத்தம்

    இன்சூரன்சு கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 7-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
    சென்னை:

    இந்திய இன்சூரன்சு ஒழுங்குமுறை ஆணையம் லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கான இன்சூரன்சு கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    உயர்த்தப்பட்ட இன்சூரன்சு கட்டணத்தை வாபஸ் பெறக்கோரி சரக்கு லாரி உரிமையாளர்கள் மத்திய அரசுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்துவந்தனர். இதுதொடர்பாக கடந்த மாதம் 7-ந்தேதி டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் லாரி உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்று கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி அழுத்தம் கொடுத்தனர்.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், கடந்த மாதம் 10-ந்தேதி அகில இந்திய சரக்கு வாகன உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் அதன் தலைவர் சன்னாரெட்டி வேலைநிறுத்த நோட்டீசு சமர்ப்பித்தார்.

    அதனைத்தொடர்ந்து 20-ந்தேதி ஐதராபாத்தில் மத்திய அரசு, இந்திய இன்சூரன்சு ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றுடன் லாரி உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே திட்டமிட்டபடி 7-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.சுகுமார் கூறியதாவது:-

    பெட்ரோல்-டீசல், சுங்க கட்டண உயர்வால் லாரி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இன்சூரன்சு கட்டணமும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. 15 சதவீதமாக இருந்த சேவைவரி நீக்கப்பட்டு, தற்போது 18 சதவீத ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டியுள்ளது.

    3-ம் நபர் விபத்து காப்பீடு நிவாரணத்துக்கான நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில் இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இன்சூரன்சு கட்டமுடியாமல் ஏராளமான வாகனங்கள் எடைக்கு போடப்பட்டு உள்ளன. தற்போது உயர்த்தப்பட்டு உள்ள இன்சூரன்சு கட்டணத்தால் போக்குவரத்து வாகனங்களின் வாடகை உயரும் என்பதோடு, பொருட்களின் விலையும் கடுமையாக உயரும். விலைவாசி 40 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும்.

    தனியார் இன்சூரன்சு நிறுவனங்களுக்கு சாதகமாக மேற்கொள்ளப்பட்டு உள்ள இந்த கட்டண உயர்வை கண்டித்து 7-ந்தேதி முதல் சரக்கு லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இது சம்பந்தமாக இறுதி நோட்டீசு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தில் உள்ள 4½ லட்சம் லாரி உரிமையாளர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். இதில் 1½ லட்சம் லாரிகள் நேஷனல் பர்மிட் உரிமம் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    Next Story
    ×