search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி மேலாண்மை வாரியத்தை தவிர எந்த அமைப்பையும் ஏற்கமாட்டோம் - தி.மு.க. மாநாட்டில் தீர்மானம்
    X

    காவிரி மேலாண்மை வாரியத்தை தவிர எந்த அமைப்பையும் ஏற்கமாட்டோம் - தி.மு.க. மாநாட்டில் தீர்மானம்

    காவிரி மேற்பார்வை அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு, காவிரி மேலாண்மை வாரியத்தை தவிர எந்த அமைப்பையும் ஏற்கமாட்டோம் என்று ஈரோடு தி.மு.க. மாநாட்டில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #DMKMaanaadu2018 #DMK
    ஈரோடு:

    ஈரோடு பெருந்துறை அருகே சரளையில் கோவை தேசிய நெடுஞ்சாலையில் தி.மு.க. மண்டல மாநாடு நேற்று தொடங்கியது. முதல் நாள் நடந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்தும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    முதல் நாள் நிகழ்ச்சியில் மாநாட்டு தலைவர் சுப்புலட்சுமி ஜெகதீசன், திருச்சி சிவா எம்.பி, வாகை சந்திரசேகர் எம்.எல்.ஏ, முதன்மை செயலாளர் துரைமுருகன் மற்றும் 15 மாவட்ட தி.மு.க செயலாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

    இன்று மாநாட்டின் 2-வது நாள் நிகழ்ச்சி காலை 9 மணிக்கு இறையன்பு குத்தூஸ் குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் கட்சியின் முன்னோடி தலைவர்கள் பேசினார்கள்.

    மாநாட்டில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் காலை 10.30 மணிக்கு மாநாட்டு மேடைக்கு வந்தார். காலை 11.30 மணியளவில் மு.க.ஸ்டாலின் மாநாட்டின் சிறப்பு தீர்மானத்தை வாசித்தார். அவர் பேசியதாவது:-



    தமிழ்நாட்டின் உயிர் நாடிப் பிரச்சினையான காவிரி நதிநீர் உரிமைக்காகத் தி.மு.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. கலைஞர் தமிழகத்தின் முதல்வராகவும், சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராகவும் இருந்தபோது தான், தலைவர் கலைஞரின் வலியுறுத்தலை ஏற்று, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைத்தது.

    நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு ஆகியவை கிடைப்பதற்கு தி.மு.க.வின் தலைமையிலான அரசு தொடர்ந்து பாடுபட்டதுடன், அண்டை மாநிலங்களுடன் நல்லுறவை மேம்படுத்தி, காவிரி டெல்டா விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி விடாதபடி, காவிரி நீர் கிடைப்பதற்கும் தொடர்ந்து ஆவன செய்தது.

    நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தெரிவித்துள்ளபடி காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் உருவாக்கப்படுவது கட்டாயம் எனக் காலக்கெடுவும் விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.

    அந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் துச்சமென மதித்து, தமிழ்நாட்டை மேலும் வஞ்சித்திடும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், ஏதேதோ சொல்லிக் காலம் தாழ்த்தி வருகிறது மத்திய அரசு.

    தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் அ.தி.மு.க. தலைமையிலான மைனாரிட்டி அரசு, மத்திய ஆட்சியாளர்களுக்குத் தீவிரமான அரசியல் அழுத்தம் கொடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆவன செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், இப்பிரச்சினையில் அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தி.மு.க. மாநில அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கி வருகிறது.



    இந்நிலையில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பையும் உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பையும் சிறிதும் பொருட்படுத்தாமல், காவிரி மேலாண்மை வாரியத்திற்குப் பதில், 9 பேர் கொண்ட காவிரி மேற்பார்வை ஆணையம் என்ற குழுவை அமைக்க மத்திய அரசின் நீர் வளத்துறை அமைச்சகம் முடிவு செய்திருப்பது, தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளை முற்றிலுமாகப் பறித்து முறித்துப் போடுகின்ற பகிரங்கமான எதிர்மறைச் செயலாகும்.

    கலைஞர் முதல்வராகவும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர் வாஜ்பாய் பிரதமராகவும் இருந்தபோது, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வழங்கப்படாத நிலையில், காவிரி நதி நீர் ஆணையம் என்கிற அமைப்பு பிரதமர் தலைமையில் உருவாக்கப்பட்டபோது, அதனைப் `பல் இல்லாத ஆணையம்’ என கேலியும் கிண்டலும் செய்தவர் அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பில் இருந்த ஜெயலலிதா என்பதை காவிரி தீரத்து விவசாயப் பெருமக்கள் மறந்துவிடவில்லை.

    இன்று, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியாகி, அதனை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில், அவை அனைத்தும் நீர்த்துப் போகும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்திற்குப் பதில், காவிரி மேற்பார்வை ஆணையம் என்ற, `பல் இல்லாதது மட்டுமல்ல உயிரற்ற ஒன்றை மத்திய அரசு’, கர்நாடகத் தேர்தல் லாபம் என்ற குறுகிய அரசியல் நோக்கில் உருவாக்க முனைந்தால், அ.தி.மு.க. அரசு தைரியமாக இந்தப் பச்சைத் துரோகத்தை எதிர்த்து நின்று, மேற்பார்வை ஆணையத்தை நிராகரித்து, மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டே ஆகவேண்டும் என்பதில், சமாதானமற்ற அழுத்தமான உறுதி காட்ட வேண்டும்.

    உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்கு மத்திய அரசிடம் எல்லா வகையிலும் வலியுறுத்த வேண்டும். மாநில உரிமைகளைத் தொடர்ந்து பறிகொடுத்து வரும் அ.தி.மு.க. அரசு, தமிழ்நாட்டின் உயிர் ஆதாரப் பிரச்சினையான காவிரி விவகாரத்திலும், நமது உரிமைகளை விட்டுக் கொடுத்து தெண்டனிட்டுக் கிடந்தால், தமிழக விவசாயிகளையும் வெகுமக்களையும் திரட்டி தி.மு.க. கடுமையான போராட்டக் களத்தில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுமென இந்த மாநாடு மத்திய, மாநில ஆட்சியாளர்களை இறுதியாக எச்சரிக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து மாலை 4 மணிக்கு மாநாட்டில் தீர்மானங்கள் மேடையில் படிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு முக்கிய பிரமுகர்கள் பேசுகிறார்கள். இரவு 8 மணிக்கு பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் சிறப்புரையாற்றுகிறார்.

    பின்னர் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாநாட்டு நிறைவு பேருரையாற்றுகிறார். அவர் பேசி முடித்ததும் தி.மு.க. மண்டல மாநாடு நிறைவு பெறுகிறது.

    நாளை (திங்கட்கிழமை) மாநாட்டு மேடையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 110 ஜோடிகளுக்கு மு.க.ஸ்டாலின் இலவச திருமணங்களை நடத்தி வைத்து அவர்களுக்கு சீர்வரிசை பொருட்களையும் வழங்கி வாழ்த்துகிறார். #CauveryManagementBoard #DMKMaanaadu2018 #DMK
    Next Story
    ×