என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூரில் கார் டிரைவர் கொலை வழக்கில் வாலிபர் சரண்
    X

    கடலூரில் கார் டிரைவர் கொலை வழக்கில் வாலிபர் சரண்

    கடலூரில் கார் டிரைவர் கொலை வழக்கில் வாலிபர் ஒருவர் சரணடைந்துள்ளார். அவரை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    சென்னை தண்டையார்பேட்டை பல்லவன் நகரை சேர்ந்தவர் வினோத் (வயது 27). கார் டிரைவர். இவருக்கு சுருதி என்ற மனைவியும், 1½ வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.

    வினோத் கடந்த ஆண்டு கடலூர் வந்தார். அவர் கடலூர் முதுநகரில் தங்கி இருந்து மாணவ- மாணவிகளை காரில் ஏற்றிக்கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிக்கு விட்டு வரும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

    கடந்த 28-ந்தேதி வினோத் திடீரென மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்தை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கடலூர் முதுநகர் அருகே உள்ள சோனாங்குப்பம் கடலில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபரின் உடல் கரை ஒதுங்கியது. அந்த உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது.

    இது பற்றிய தகவலின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் இறந்தவர் காணாமல் போன வினோத் என்பது தெரிந்தது.

    மேலும் அவரின் கை, கால்களை கட்டி கடலில் போட்டு மர்மநபர்கள் கொலை செய்து இருந்ததும் தெரிந்தது. இதையடுத்து வினோத்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், ஆண்டவர் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. மாணவி ஒருவரை வினோத் கடத்தி சென்றது தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போதுதான் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.

    மேலும் சிங்காரதோப்பு பகுதியில் உள்ள ஒரு பெண்ணுடன் வினோத்துக்கு கள்ளத்தொடர்பு இருந்தது தெரிந்தது.

    வினோத்தின் கொலைக்கும், ஏற்கனவே வினோத்தால் கடத்தப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கும் சம்பந்தம் உள்ளதா? அல்லது மற்றொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் வினோத் கொலை செய்யப்பட்டாரா? என்று விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் இன்று மதியம் 12 மணியளவில் வாலிபர் ஒருவர் புதுநகர் போலீஸ்நிலையத்துக்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்த போலீசாரிடம் கார் டிரைவர் வினோத்தை நான் தான் கொலை செய்தேன் என்று கூறி சரணடைந்தார்.

    இந்த வழக்கு குறித்து கடலூர் துறைமுக போலீசார் விசாரணை நடத்தி வருவதால் அந்த வாலிபரை துறைமுக போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு ரகசிய அறையில் வைத்து அவரிடம் வினோத்தை கொன்றது ஏன்? இந்த கொலையில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டார்களா? என்பது குறித்து போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×