search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாய்-2 மகன்களை கொன்ற கள்ளக்காதலன் கைது: பரபரப்பு வாக்குமூலம்
    X

    தாய்-2 மகன்களை கொன்ற கள்ளக்காதலன் கைது: பரபரப்பு வாக்குமூலம்

    நித்திரவிளை அருகே தாய்-2 மகன்களை கொன்ற சம்பவத்தில் திடீர் திருப்பமாக கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கொன்றதாக பரபரப்பு வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.
    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே வள்ளவிளை, ததேயுபுரத்தை சேர்ந்தவர் விஜயதாசன், மீன்பிடி தொழிலாளி. இவருடைய மனைவி பேபி ஷாலினி என்கிற சங்கீதா (வயது 27). இவர்களுக்கு சஞ்சய் மிசியோ (7), பியு போபர்(5) என்ற இரண்டு மகன்கள் இருந்தனர்.

    இவர்கள் நித்திரவிளை தெருமுக்கு பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சில நாட்களுக்கு முன்பு விஜயதாசன் ஆழ்கடல் மீன்பிடிப்பு பணிக்கு சென்றார்.

    இந்தநிலையில், கடந்த 25-ந் தேதி பேபி ஷாலினியும் இரண்டு மகன்களும் நித்திரவிளை அருகே மங்காடு பகுதி தாமிரபரணி ஆற்றில் பிணமாக கிடந்தனர். இதுகுறித்து நித்திரவிளை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணங்களை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் தாய்-2 மகன்களும் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து நித்திரவிளை போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.

    பேபி ஷாலினியின் செல்போன் மூலம் விசாரணை நடத்திய போது, அவரிடம் பலர் அடிக்கடி பேசிய விவரங்கள் தெரிய வந்தது. இதையடுத்து 5-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

    அவர்களில் இனயம்புத்தன்துறையை சேர்ந்த கலையரசு (28) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. கலையரசனை பிடித்து விசாரணை நடத்திய போது, தாய்-2 மகன்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. பேபி ஷாலினியையும், 2 மகன்களையும் கொடூரமான முறையில் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார்.

    கொலை செய்தது பற்றி கலையரசன் கொடுத்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் கடந்த 4 ஆண்டுகளாக வெளிநாட்டில் மீன்பிடி தொழில் செய்து வந்தேன். சில மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்தேன். பேபி ஷாலினியின் தம்பி எனக்கு நண்பர் ஆவார். அவரை பார்ப்பதற்காக அவர்களது வீட்டுக்கு சென்றேன். அப்போது, பேபி ஷாலினி தனது கணவரை பிரிந்து அங்கு தங்கியிருந்தார்.

    இதையடுத்து பேபி ஷாலினியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தோம்.

    கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு, பேபி ஷாலினியும், அவரது கணவர் விஜயதாசனும் மறுபடியும் சேர்ந்தனர். அவர்கள் தெருமுக்கு பகுதியில் வாடகை வீட்டில் தங்க தொடங்கினர். விஜயதாசன் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது, நான் அங்கு சென்று பேபி ஷாலினியை சந்தித்து வந்தேன். அப்போதெல்லாம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பேபி ஷாலினி கூறி வந்தார்.

    இந்தநிலையில், சம்பவத்தன்று இரவு விஜயதாசன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருப்பதை அறிந்து, அவரது வீட்டுக்கு சென்றேன். அப்போது, பேபி ஷாலினி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். ஆனால், நான் திருமணம் செய்ய முடியாது என்றேன். இதனால், எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, நீ என்னை திருமணம் செய்யவில்லை எனில் உனது வீட்டின் உள்ளே புகுந்து குடியிருப்பேன் என கூறி மிரட்டினார். இதனால், ஆத்திரமடைந்த நான் அவரை தாக்கினேன். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடனே, அவரது முகத்தை பாலித்தீன் பையால் சுற்றி, கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்.

    பின்னர், கொலையை மறைப்பதற்காக உடலை மோட்டார் சைக்கிளில் தூக்கி வைத்து, மங்காடு தாமிரபரணி ஆற்றில் வீசினேன். பின்பு வீட்டுக்கு சென்ற போது பேபி ஷாலினின் இரண்டு குழந்தைகளும் தூங்கி கொண்டிருந்தனர். நான் அங்கு அடிக்கடி செல்வதை அவர்கள் பார்த்துள்ளனர். எனவே, குழந்தைகள் இருவரும் என்னை அடையாளம் காட்டி கொடுப்பார்கள் என நினைத்து, அவர்களையும் கொன்றுவிட நினைத்தேன்.

    குழந்தைகள் இருவரையும் எழுப்பி, அம்மா கூப்பிடுவதாக கூறி மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றேன். அவர்களையும் பேபி ஷாலினியை வீசிய இடத்துக்கு கொண்டு சென்று ஆற்றில் வீசினேன்.

    குழந்தைகளுக்கு நீச்சல் தெரியாததால் இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். அதன்பின்பு, எதுவும் தெரியாதது போல் வீடு திரும்பினேன். பேபி ஷாலினிக்கு மேலும் பலரிடம் தொடர்பு உண்டு. இதனால், அவர்கள் சிக்கி கொள்வார்கள் என நினைத்தேன். ஆனால், போலீசார் என்னை அடையாளம் கண்டு கொண்டனர்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், பேபி ஷாலினியின் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. அந்த நகைகளையும் கலையரசுவிடம் இருந்து போலீசார் மீட்டனர். இதையடுத்து கலையரசுவை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட கலையரசுக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    கொலை செய்யப்பட்ட பேபி ஷாலினியின் கணவர் விஜயதாசன் கூறியதாவது:-

    எனக்கும், பேபிஷாலினிக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு 2 மகன்கள் பிறந்தனர். நாங்கள் மகிழ்ச்சியாகதான் வாழ்ந்து வந்தோம். எங்களுக்குள் ஏற்படும் சிறு, சிறு வாக்குவாதங்களை, மனைவியின் தாயார் பெரிய பிரச்சினையாக மாற்றி, பேபி ஷாலினியை அழைத்து செல்வது வழக்கம். அதன்படி, கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு பேபி ஷாலினியை அவரது தாயார் அழைத்து சென்றார். தாய் வீட்டில் தங்கியிருந்த போது, பேபி ஷாலினிக்கும், கலையரசுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் நாங்கள் தனியாக வீடு எடுத்து தங்க தொடங்கினோம். அதன்பின்பும் கலையரசு, பேபி ஷாலினி தொடர்ந்து சந்தித்து வந்துள்ளார். நான் கடலுக்கு சென்ற நேரம் பார்த்து எனது மனைவியையும், குழந்தைகளையும் கொடூரமாக கொலை செய்துள்ளார். அவர் களை இழந்தது எனக்கு பெரும் வேதனையாக உள்ளது.

    இவ்வாறு தொழிலாளி விஜயதாசன் கண்ணீருடன் கூறினார்.
    Next Story
    ×