என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருத்தாசலத்தில் வாலிபர் அடித்து கொலை: 2 பேருக்கு வலைவீச்சு
    X

    விருத்தாசலத்தில் வாலிபர் அடித்து கொலை: 2 பேருக்கு வலைவீச்சு

    கோவில் உண்டியல் திருட்டு போனது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை தேடி வருகிறார்கள்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த சிறுவரப் பூரில் ஓம்சக்திகோவில் உள்ளது. கோவில் பூசாரி வழக்கமான பூஜைகளை முடித்து விட்டு நேற்று இரவு கோவிலின் கதவை பூட்டி சென்றார்.

    இதை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் சிலர் இரவில் கோவிலுக்குள் புகுந்தனர். அங்கிருந்த செம்பு உண்டியலை தூக்கிக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கோவில் உண்டியல் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் கோவில் முன்பு திரண்டனர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த கமல் என்கிற கமல்ராஜ் (வயது 27) என்பவர்தான் கோவில் உண்டியலை திருடியிருக்கலாம் என்று தகவல் பொதுமக்களிடையே பரவியது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் (வயது 30), திருநாவுக்கரசு (50) ஆகிய 2 பேர் கமல்ராஜின் வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்த கமல்ராஜிடம் கோவிலில் உண்டியல் திருடுபோனது குறித்து கேட்டனர். இதில் கமல்ராஜிக்கும் சவுந்தர் ராஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி சவுந்தர்ராஜன் சரமாரியாக கமல் ராஜை தாக்கினார். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

    பின்னர் கமல்ராஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே வீட்டில் இருந்தவர்கள் கமல்ராஜை 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் கமல்ராஜ் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கம்மாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கமல்ராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். கமல்ராஜ் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து சவுந்தர்ராஜனையும், திருநாவுக்கரசையும் வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

    Next Story
    ×