என் மலர்
செய்திகள்

சிவகங்கை அருகே விபத்தில் வாலிபர் பலி: காயம் அடைந்தவர்களுக்கு கலெக்டர் உதவி
சிவகங்கை:
சிவகங்கை நகரில் உள்ள செந்தமிழ்நகரைச் சேர்ந்தவர் காளீஸ்வரி (வயது 45). இவரது மகன் பாலமுத்து (26), என்ஜினீயரிங் பட்டதாரி.
நேற்று காளீஸ்வரி, பாலமுத்துவுடன் மோட்டார் சைக்கிளில் திருப்பத்தூருக்கு சென்றார். பின்னர் இரவு அங்கிருந்து தாய்-மகனும் ஊருக்கு புறப்பட்டனர். அப்போது காளீஸ்வரி தனது 2 வயதுடைய பேரன் அர்சித்தையும் அழைத்து வந்தார்.
ஓக்கூர் என்ற இடத்தில் வந்த போது எதிரே வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பாலமுத்து, காளீஸ்வரி, அர்சித் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த பாலமுத்து சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த மாவட்ட கலெக்டர் லதா, விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காளீஸ்வரி, குழந்தை அர்சித் ஆகியோரை மீட்டு அரசு வாகனத்திலேயே சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் காயம் அடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்குமாறு கலெக்டர் லதா உத்தரவிட்டார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.