என் மலர்
செய்திகள்

தண்டவாளத்தில் படுத்து திருச்சி மருத்துவக்கல்லூரி மாணவர் திடீர் தற்கொலை
குளித்தலை:
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் யேசுதாஸ். இவரது மகன் அமிர்தராஜ் (வயது 21). இவர் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி. பி.எஸ். 2-ம் ஆண்டு பயின்று வந்தார்.
நேற்று தேர்வு எழுதுவதற்காக வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றார். பின்னர் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அமிர்தராஜை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இன்று காலை குளித்தலை அருகே கள்ளப்பள்ளி பெருமாள் கோவில் அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு இறந்து கிடந்தது அமிர்தராஜ் என்பது தெரியவந்தது. அவரது தலை துண்டாகவும், உடல் தனியாகவும் கிடந்தது. உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அமிர்தராஜ் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. ரெயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். தேர்வை சரியாக எழுதாததால் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமிர்தராஜ் இறந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் திருச்சி மருத்துவக்கல்லூரி மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.