என் மலர்tooltip icon

    செய்திகள்

    இடைத்தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் விஷால் அரசியலுக்கு வர அச்சாரம் போட்டுள்ளார்: திருமாவளவன்
    X

    இடைத்தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் விஷால் அரசியலுக்கு வர அச்சாரம் போட்டுள்ளார்: திருமாவளவன்

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் நடிகர் விஷால் அரசியலுக்கு வர அச்சாரம் போட்டுள்ளார் என்று திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    ஈரோடு:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஈரோட்டில் இன்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    வெள்ள சேதத்தால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. அந்த 3 மாவட்டங்களையும் பேரிடர் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.

    இந்த புயல் வெள்ளத்தால் 1000 மீனவர்கள் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களை மத்திய அரசின் கப்பல் மூலம் தேடி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இது போதாது. மேலும் துணை ராணுவத்தை அனுப்பி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இலங்கையில் தமிழக மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கி இருப்பதாக கூறுகிறார்கள். வெள்ள சேதத்தால் எத்தனை பேர் உயிர் இழந்தனர்? எத்தனை பேர் காணாமல் போய் விட்டார்கள்? என்ற உண்மை நிலையை தெளிவு படுத்த வேண்டும்.

    வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் 2 அமைச்சர்கள் நேரில் சென்று மீட்பு நடவடிக்கை பணியில் ஈடுபட்டு உள்ளதாக முதல்- அமைச்சர் கூறியுள்ளார். இது போதாது. மேலும் அமைச்சர்களை அனுப்பி வைக்க வேண்டும்.

    இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செல்வதாக முதல்வர் அறிவித்துள்ளார். இது வரவேற்கதக்கது. மேலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் நேரில் சென்று வெள்ள சேத விவரங்களை பார்வையிட்டு மீட்பு பணியில் ஈடுபட வேண்டும்.

    ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் எங்கள் ஆதரவை தி.மு.க.வுக்கு அளித்துள்ளோம். வரும் 7-ந் தேதி முதல் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளேன்.

    அவரது வெற்றிக்காக எங்கள் கட்சி தொண்டர்களும் பிரசாரம் செய்து தி.மு.க.வுக்கு ஆதரவு கேட்பார்கள்.

    ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் நடிகர் விஷால் அரசியலுக்கு வர அச்சாரம் போட்டுள்ளார். நடிகர்கள் அரசியலுக்கு வருவது இயல்பு தான் நடிகர் விஷாலால் ஓட்டுகளை பிரிக்க முடியுமே தவிர ஜெயிக்க முடியாது. தி.மு.க. வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    கடலூரில் வாலிபர் ஆனந்த் தற்கொலை செய்த விவகாரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது பொய்யான பிரசாரம் செய்து பழி போட்டு உள்ளார். ஆனால் போலீசார் விசாரணையில் வாலிபர் ஆனந்த் தற்கொலை செய்து உள்ளதாக கூறி உள்ளனர்.

    தி.மு.க.வுக்கு நாங்கள் ஆதரவு அளித்திருப்பதை ராமதாசால் ஏற்று கொள்ள முடியவில்லை. எங்கே தி.மு.க. வெற்றி பெற்று வரும் காலத்தில் மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சர் ஆகிவிடு வாரோ... என்ற வயிற்றெரிச்சலில் ராமதாஸ் கூறி உள்ளார். மொத்தத்தில் நாங்கள் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதை டாக்டர் ராமதாஸ் விரும்பவில்லை.

    ஈரோட்டில் பாதாள சாக்கடை திட்டம் வெகு நாட்களாக நடந்து வருகிறது. அந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

    இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

    Next Story
    ×