search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவில் வழியாக மின்னல் வேகத்தில் சென்ற ஆம்புலன்ஸ்.
    X
    நாகர்கோவில் வழியாக மின்னல் வேகத்தில் சென்ற ஆம்புலன்ஸ்.

    திருவனந்தபுரம்- வேலூருக்கு இதய ஆபரே‌ஷனுக்காக 8½ மணி நேரத்தில் ஆம்புலன்சில் சென்ற சிறுமி

    சிறுமியின் இதய ஆபரேஷனுக்காக அவரை திருவனந்தபுரத்தில் இருந்து வேலூருக்கு 8½ மணி நேரத்தில் ஆம்புலன்சில் கொண்டு செல்ல வழி ஏற்படுத்திக்கொடுத்த போலீசாரின் சேவைக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    நோயாளிகளின் உயிரை காக்கும் மருத்துவம் தற்போது மிகவும் நவீனமாகி விட்டது. அதேபோல நோயாளிகளை உடனுக்குடன் ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் சேவையும் தற்போது அனைவருக்கும் கிடைக்கும் வகையில் உள்ளது.

    மேலும் நோயாளிகளுக்கு குறித்த நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டால் மட்டுமே அவர்களை காப்பாற்ற முடியும் என்ற நிலை வரும்போது அனைவரும் மனிதாபிமானத்துடன் ஒன்று இணைந்து செயல்படும் நிலையும் தற்போது அதிகரித்து வருகிறது.

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள புற்றுநோய் ஆஸ்பத்திரியில் 2½ வயது சிறுமி புற்று நோய் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவசரமாக அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அவரது உயிரை காப்பாற்ற முடியும் என்ற சிக்கலான சூழ்நிலை ஏற்பட்டது.

    வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் அந்த சிறுமியை அனுமதித்து அறுவை சிகிச்சை செய்யவும் டாக்டர்கள் ஏற்பாடு செய்தனர். ஆனால் 9 மணி நேரத்திற்குள் அந்த சிறுமியை அங்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து கேரள போலீசார் மற்றும் தமிழக போலீசார் இணைந்து சிறுமியை அழைத்துக் கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெருக்கடியில் சிக்காமல் செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர்.

    அதன்படி திருவனந்தபுரம்- வேலூர் பயணப்பாதையில் உள்ள ரோந்து போலீசார், போக்குவரத்து போலீசார் ஆகியோருக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று இரவு 7.45 மணிக்கு திருவனந்தபுரம் ஆஸ்பத்திரியில் இருந்து சிறுமியுடன் ஆம்புலன்ஸ் புறப்பட்டது.

    குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளைக்கு 8.30 மணிக்கு வந்த அந்த ஆம்புலன்ஸ் மின்னல் வேகத்தில் 9.15 மணிக்கு நாகர்கோவிலை கடந்து நெல்லையை நோக்கி சென்றது. மதுரை வழியாக பயணத்தை தொடர்ந்த அந்த ஆம்புலன்ஸ் இன்று அதிகாலை 4.10 மணிக்கு வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியை சென்றடைந்தது.

    9 மணி நேரத்தில் செல்ல வேண்டும் என்று திட்டமிட்ட பயணம் ஆம்புலன்ஸ் டிரைவரின் சாமர்த்தியம் மற்றும் போலீசாரின் ஒத்துழைப்பு காரணமாக ½ மணி நேரம் முன்னதாகவே சி.எம்.சி. ஆஸ்பத்திரியை சென்றடைந்தது.

    கேரள போலீசார் மற்றும் குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், போலீஸ் சூப்பிரண்டு துரை ஆகியோர் போக்குவரத்து போலீசாருக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கி நேரடி கண்காணிப்பு மூலம் கேரள சிறுமியின் உயிரை காக்க உதவியதை அனைவரும் பாராட்டினார்கள்.
    Next Story
    ×