search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீக்குளிப்பு சம்பவம் எதிரொலி: நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் 7 வாயில்களை மூட நடவடிக்கை
    X

    தீக்குளிப்பு சம்பவம் எதிரொலி: நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் 7 வாயில்களை மூட நடவடிக்கை

    தீக்குளிப்பு சம்பவத்தின் எதிரொலியாக நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள 7 வாயில்களை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் காசிதர்மம் கிராமத்தை சேர்ந்த இசக்கி முத்து என்பவர் கடந்த வாரம் கந்து வட்டி கொடுமையால் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தீக்குளித்தார். பின்னர், நால்வரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    மாநிலத்தை அதிர வைத்த இந்த சம்பவத்தால் கந்துவட்டி கொடுமை குறித்தான புகார்களை அலட்சியப்படுத்த வேண்டாம் என காவல்துறைக்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டார். இந்நிலையில், இன்று காலை அரசுப்போக்குவரத்து கழக ஊழியர் ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயன்றார்.

    உடனே அங்கிருந்த காவலர்கள் அதனை தடுத்து நிறுத்தி அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மொத்தம் 9 நுழைவு வாயில்கள் உள்ளன. பெரும்பாலான அரசு அலுவலகங்கள் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளதால் எல்லா வாயில்கள் வழியாகவும் பொதுமக்கள் வருகை தருவார்கள்.

    எல்லா வாயில்களிலும் காவலர்கள் சோதனையிட முடியாது என்பதால், தற்போது 7 வாயில்களை நிரந்தரமாக மூடுவது குறித்து அதிகாரிகள் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீதம் உள்ள இரு வாயில்கள் வழியாக மட்டும் பொதுமக்களை அனுமதிக்கவும் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×