என் மலர்
செய்திகள்

கே.கே.நகரில் பட்டப்பகலில் பெண்களிடம் கத்திமுனையில் 10 பவுன் நகை கொள்ளை
போரூர்:
சென்னை கே.கே.நகர் ஜீவானந்தம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பசுவமதி. இவரது மனைவி பரமேஸ்வரி (43). பட்டு புடவை வியாபாரம் செய்து வருகிறார். நேற்று பகலில் பசுவமதி வெளியில் சென்று இருந்தார். பரமேஸ்வரி அவரது நண்பர் மாலாவுடன் வீட்டில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு வாலிபர் வந்து கதவை தட்டினார். பரமேஸ்வரி கதவை திறந்தார். பிரபல நிறுவனத்தில் இருந்து தண்ணீர் சுத்திகரிப்பு செய்வதற்காக வந்து இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். அதற்கு பரமேஸ்வரி எங்கள் வீட்டில் இருந்து எந்த புகாரும் கொடுக்க வில்லை என்று கூறியபோது அந்த வாலிபர் வீட்டுக்குள் புகுந்து கதவை மூடினார்.
இருவரையும் சமையலறைக்கு அழைத்து சென்று கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். கூச்சல் போட்டால் கொன்று விடுவேன் என்று மிரட்டி சமையல் அறையில் வைத்து பூட்டினார். பின்னர் படுக்கை அறைக்கு சென்று அங்கிருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 10 பவுன் தங்க நகைகள் ரொக்கம் ரூ.12500 மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை சுருட்டிக் கொண்டு தப்பி ஓடி விட்டார். மதியம் 12 மணியளவில் இந்த துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
சிறிதுநேரம் கழித்து பரமேஸ்வரி சத்தம்போட்டு பக்கத்தில் உள்ளவர்களை அழைத்தார். அதற்குள் இருவரும் சமையல் அறையில் இருந்து வெளியே வந்தனர்.
இதுபற்றி கே.கேநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.






