என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருத்தாசலம் அருகே டிராக்டர் மோதி பெண் பலி: உறவினர்கள் சாலை மறியல்
    X

    விருத்தாசலம் அருகே டிராக்டர் மோதி பெண் பலி: உறவினர்கள் சாலை மறியல்

    விருத்தாசலம் அருகே டிராக்டர் மோதி பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    விருத்தாசலம் அருகே உள்ள கார்குடல் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி மீனாட்சி (வயது 34). இவர் பொன்னேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு செல்வதற்காக பொன்னேரி பஸ் நிறுத்தத்தில் இன்று காலை பஸ்சுக்காக காத்திருந்தார்.

    அப்போது அதேப்பகுதியில் உள்ள ஏரியில் இருந்து மண் ஏற்றி கொண்டு டிராக்டர் வந்து கொண்டிருந்தது. கண்இமைக்கும் நேரத்தில் அந்த டிராக்டர் பஸ்சுக்காக காத்திருந்த மீனாட்சி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மீனாட்சி இறந்தார். விபத்து நடந்த உடன் டிரைவர் டிராக்டரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    தகவல் அறிந்த மீனாட்சியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு திரண்டனர். அவர்கள் டிராக்டரை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். விருத்தாசலம் தாசில்தார் பன்னீர்செல்வம், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது விபத்தில் இறந்த மீனாட்சியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும், இந்த பகுதியில் வாகனங்கள் வேகமாக செல்வதை தடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதை கேட்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை ஏற்று கொண்ட அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதையடுத்து மீனாட்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×