search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்.ராதாகிருஷ்ணன், மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: அர்ஜூன் சம்பத்
    X

    பொன்.ராதாகிருஷ்ணன், மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: அர்ஜூன் சம்பத்

    தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல் இதுவரை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படவில்லை. எனவே மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அர்ஜூன் சம்பத் பேசினார்.
    நாகர்கோவில்:

    ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், இதுவரை வழங்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் இந்து மக்கள் கட்சி சார்பில் இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கடந்த முறை காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது இந்து ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாரதிய ஜனதாவினர் ஜூலை போராட்டம் நடத்தினர். பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்ததும் ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். முதல் கையெழுத்தாக அதற்கான கையெழுத்து போடப்படும் என்றும் வாக்குறுதி அளித்து வாக்குகளை பெற்றனர்.


    ஆனால் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தனது சம்பளத்தை மட்டும் ஏழை குழந்தைகளின் கல்விக்காக உதவி செய்து வருவதாக கூறுகிறார். தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல் இதுவரை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படவில்லை.

    எனவே மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அடுத்த ஜூலை போராட்டத்துக்குள்ளாவது கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும். ஏழை இந்து மாணவர்களை வஞ்சிக்க கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்துக்கு இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முத்து தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். மாநில நிர்வாகிகள் பொன்னுசாமி, வசந்தகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். செல்வம், தினேஷ், சரஸ்வதி, ஸ்ரீமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×