என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் குறையாத வெயிலின் தாக்கம்
    X

    ஈரோடு மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் குறையாத வெயிலின் தாக்கம்

    ஈரோடு மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. இதனால் மக்கள் வெளியில் நடமாட இன்னமும் அச்சத்தில்தான் உள்ளனர்.

    ஈரோடு:

    அக்னி நட்சத்திரம் கடந்த மாதம் 4-ந் தேதி தொடங்கியது. அதற்கு முன்பே ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. எனவே அக்னி நட்சத்திர காலத்திலும் வெயிலின் கொடுமை அதிகமாக இருந்தது. ஆனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் அக்னி நட்சத்திர காலத்தின் பல நாட்களில் இரவு வேளையில் மழை பெய்தது.

    இது மக்கள் பகல் நேரத்தில் அனுபவித்த வெயில் கொடுமைக்கு இதமாக அமைந்தது. இரவு நேரத்தில் மக்கள் குளிர்ச்சியை அனுபவித்தனர். இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி அக்னி நட்சத்திர வெயில் முடிந்தது. எனவே இனி வெயில் கொடுமை இருக்காது என்று ஈரோடு மாவட்ட மக்கள் நினைத்திருந்தனர்.

    ஆனால் அவர்கள் நினைத்ததுபோல அல்லாமல் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. பகல் நேரத்தில் அடிக்கும் வெயில் மக்களை மிகவும் வாட்டுகிறது.

    அவ்வப்போது வானில் மேக மூட்டம் வந்தாலும், திடீரென அடிக்கும் வெயில் உக்கிரத்தை காட்டுகிறது. மதிய நேரத்தில் மக்கள் வியர்வையால் நனைந்து வருகின்றனர். இதனால் மக்கள் வெளியில் நடமாட இன்னமும் அச்சத்தில்தான் உள்ளனர்.

    கடந்த ஒரு வாரத்தில் (கடந்த மாதம் 26-ந் தேதி முதல் கடந்த 1-ந் தேதி வரை) ஈரோடு மாவட்டத்தில் சராசரியாக அதிகபட்சம் 91.4 டிகிரியும், குறைந்தபட்சம் 75.2 டிகிரியும் வெயில் பதிவாகி உள்ளது. கடந்த 26, 31-ந் தேதி அதிகபட்சமாக 93.2 டிகிரி வெயிலும், கடந்த 29-ந் தேதி குறைந்தபட்சமாக 87.8 டிகிரி வெயிலும் பதிவாகி உள்ளது.

    வெயிலின் தாக்கம் இருந்தாலும் தினமும் அவ்வப்போது வானம் மேக மூட்டமாகவும், பாதி அளவு மேக மூட்டமாகவும், கொஞ்ச மேக மூட்டமாகவும் காணப்பட்டது.

    கடந்த 28-ந் தேதி காலை 11.30 மணி அளவிலும், 27-ந் தேதி காலை 8.30 மணி, மாலை 5.30 மணி அளவில் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் அதிக மேக மூட்டம் நிலவியது

    கடந்த 29-ந் தேதி மாலை நேரத்தில் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான அளவில் மழை பெய்தது. பெரும்பாலான நாட்கள் நள்ளிரவும், அதிகாலை நேரத்திலும் மூடுபனி, லேசான பனி நிலவியது.

    கடந்த 1 வாரத்தில் காற்றின் வேகமும் இருந்தது. கடந்த 27-ந் தேதி மதியம் 2.30 மணி அளவில் அதிகபட்சமாக மணிக்கு 30 கி.மீட்டர் வேகத்தில் காற்றடித்தது. குறைந்தபட்சமாக 29-ந் தேதி மதியம் 2.30 மணி அளவில் மணிக்கு 7 கி.மீட்டர் வேகத்தில் காற்றடித்தது.

    Next Story
    ×