என் மலர்
செய்திகள்

மேற்படிப்பு படிக்க பண வசதி இல்லாததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை
கள்ளக்குறிச்சி:
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள எஸ்.ஒகையூரை சேர்ந்தவர் அர்ஜூனன், விவசாயி. இவரது மகள் புஷ்பா (வயது 18). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
பொதுத்தேர்வில் புஷ்பா அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். இந்த நிலையில் அவர் தன்னை மேற்படிப்பு படிக்க வைக்குமாறு தனது பெற்றோரிடம் கூறினார். அதற்கு அவரது பெற்றோர் தங்களிடம் தற்போது படிக்க வைக்க பணவசதி இல்லை என்று கூறினார்.
மேற்படிப்பு படிக்க பணவசதி இல்லாததால் புஷ்பா மனமுடைந்தார். வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி புஷ்பா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வரஞ்சரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேற்படிப்பு படிக்க பணவசதி இல்லாததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.