என் மலர்
செய்திகள்

பவானியில் சூறாவளி காற்றுடன் மழை: மரங்கள்-மின் கம்பங்கள் முறிந்து விழுந்தது
பவானி:
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் கோடைமழை பெய்தது.
பவானியில் நேற்று இரவு இடி மின்னல் மற்றும் பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் பவானியில் உள்ள குருநாத கவுண்டர்வீதி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மரங்கள் முறிந்து மின்சார கம்பத்தின் மீது விழுந்ததில் மின்கம்பிகள் அறுந்து மின்கம்பங்கள் முறிந்து ரோட்டில் விழுந்தது.
இதுபோல் பவானி தாசில்தார் அலுவலகம் அரசு மருத்துவமனை அந்தியூர் சாலை பவானி காளிங்க ராயன்பாளையம் அருகேயுள்ள மேட்டுநாசுவம் பாளையம் பகுதி போன்ற இடங்களில் மரங்கள்மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்ததில் இரவு முழுவதும் மின் சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் மக்கள் பெரும் அவதி அடைந்தனர்.
இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்தனர் அநேக இடங்களில் மின்கம்பங்களின் அடி பாகங்கள் உடைந்த நிலையிலேயே உள்ளது. அதனால் தான் இயற்கையின் சீற்றத்தை மின் கம்பங்களால் தாக்குப்பிடிக்க முடிய வில்லை என பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் தெரிவித்தனர்.
இதனால் மிகவும் மோசமான நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்றி புதிய மின் கம்பங்களை நட வேண்டும் என பவானி நகர மக்கள் மின்வாரியத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.






