என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடலூர் அருகே டாஸ்மாக் கடைக்குள் புகுந்து மதுப்பாட்டில்களை உடைத்த கிராம மக்கள்
    X

    வடலூர் அருகே டாஸ்மாக் கடைக்குள் புகுந்து மதுப்பாட்டில்களை உடைத்த கிராம மக்கள்

    வடலூர் அருகே டாஸ்மாக் கடைக்குள் புகுந்து மதுப்பாட்டில்களை கிராம மக்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள அன்னதானம்பேட்டை கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை அமைந்திருந்தது. இந்த டாஸ்மாக் கடைக்கு வரும் மதுபிரியர்கள் குடித்து விட்டு போதை தலைக்கேறியதும் பஸ் நிலையத்தில் நிற்கும் பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகளை கேலி கிண்டல் செய்து வந்தனர்.

    இதனால் இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இந்நிலையில் கிராம மக்கள் இந்த டாஸ்மாக் கடைமுன் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கடைக்குள் புகுந்து அங்கிருந்த மதுபாட்டில்களை உடைத்து சூறையாடினர்.

    இதையடுத்து அவர்கள் டாஸ்மாக் கடையின் முன்பு கடலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த வடலூர் போலீசார் மற்றும் தாசில்தார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பஸ் நிறுத்தம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    அவர்களிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை ஏற்ற கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    டாஸ்மாக் கடையை சூறையாடியது தொடர்பாக 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×