என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபரை கடத்தியதாக கைதான 2 பேர் சிறையில் அடைப்பு
- பாளை போலீசார் விசாரணை நடத்தி தச்சநல்லூர் அருகே ஒரு வீட்டில் இருந்த வேல்ராஜை மீட்டனர்.
- பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நெல்லை:
பாளை தியாகராஜநகரை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மகன் வேல்ராஜ்(வயது 29). தச்சு தொழிலாளி.
சம்பவத்தன்று தூத்துக்கு டிக்கு சென்றுவிட்டு திரும்பிய அவர் தனது தந்தைக்கு போன் செய்து தன்னை சிலர் கடத்தி சென்றுவிட்டதாகவும், ரூ.15 லட்சம் பணம் கேட்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இசக்கிமுத்து அளித்த புகாரின்பேரில் பாளை போலீசார் விசாரணை நடத்தி தச்சநல்லூர் அருகே ஒரு வீட்டில் இருந்த வேல்ராஜை மீட்டனர். அவருடன் இருந்த அவரது நண்பர்களான தச்சநல்லூரை சேர்ந்த வெங்கடேஷ்(38), தாழையூத்தை சேர்ந்த செந்தில்ராஜ்(35) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
தங்கம் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.1 லட்சத்தை வாங்கி கொண்டு அதனை திருப்பி கொடுக்காமல் வேல்ராஜ் காலம் தாழ்த்தியது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் வெங்கடேஷ், செந்தில்ராஜ் ஆகியோார் செல்போனில் அழைத்த போது, வேல்ராஜ் தானாகவே தச்சநல்லூருக்கு சென்று அவர்களிடம் பேசிக்கொண்டிருந்ததும், தனது தந்தையிடம் ரூ.15 லட்சம் கேட்டு போன் செய்ததும் தெரியவந்தது.
அதே நேரத்தில் நண்பர்கள் 2 பேரும் போலீசில் புகார் தெரிவிக்காமல், தாங்களாகவே வேல்ராஜை அழைத்து பணம் கேட்டு வந்ததால் கடத்தியதாக கூறி அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைதான நண்பர்கள் 2 பேரும் ரூ.1 லட்சம் பணம் தொடர்பாக புகார் அளித்தால், வேல்ராஜ் மீது பதிலுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.