search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களை கட்சியில் சேர்ப்பதில் தயக்கம் இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்
    X

    தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களை கட்சியில் சேர்ப்பதில் தயக்கம் இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட18 எம்.எல்.ஏ.க்களை கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்வதில் எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #18MLAs
    சென்னை:

    அ.தி.மு.க.வில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கில் ஐகோர்ட்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை கூறியதால் 3-வது நீதிபதியின் விசாரணைக்கு இந்த வழக்கு செல்ல உள்ளது.

    அந்த நீதிபதி தீர்ப்புக்கு பிறகுதான் எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லுமா? இல்லையா? என்பது பற்றிய முடிவு தெரியும்.

    இந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் இது சம்பந்தமாக ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம்:

    கேள்வி: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் கட்சிக்கு கொண்டுவர ஏதேனும் நடவடிக்கை எடுக்கிறீர்களா?

    பதில்: அ.தி.மு.க. என்பது மாபெரும் கட்சி. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களால் இந்த கட்சி சிறப்பான வளர்ச்சியை பெற்றிருக்கிறது. தற்போதைய அரசு அம்மா ஏற்படுத்தியது.

    எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் தலைவராக ஏற்றுக்கொண்ட யாரும் அடுத்த கட்சிக்கு செல்ல மாட்டார்கள். இந்த 18 எம்.எல்.ஏ.க்களை பொறுத்த வரை அவர்களை கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்வதில் எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

    அவர்கள் கட்சிக்கு மீண்டும் வர விரும்பினால் நாங்கள் அவர்களை அழைக்க தயாராக இருக்கிறோம். அதே நேரத்தில் சசிகலா, தினகரன், திவாகரன் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஒருபோதும் கட்சியில் சேர்க்கமாட்டோம்.


    கே: 18 எம்.எல்.ஏ.க்களும், எதிர் அணியில் 10 மாதமாக செயல்பட்டு வந்துள்ளனர். அவர்கள் கட்சிக்கு திரும்பி வர ஏதேனும் சலுகைகள் அளிக்க தயாராக இருக்கிறீர்களா?

    ப: அரசியல் கட்சி என்பது வியாபார ஒப்பந்தம் அல்ல. வியாபாரத்தை போல சலுகைகள், எதிர்பார்ப்புகளை வழங்க முடியாது. இது முழுமையாக அரசியல் கட்சி சம்பந்தப்பட்ட பிரச்சனை. கட்சியின் உண்மையான உறுப்பினர்கள் கட்சிக்கு பிரச்சனைகள் வருவதை விரும்பமாட்டார்கள். கட்சிக்கு பாதுகாப்பாக இருப்பார்கள்.

    இதுபோன்ற கருத்துக்கள் கொண்டவர்கள் கட்சிக்கு திரும்ப வருவார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் மறைவுக்கு பிறகு எங்களது கட்சியில் இருந்து யாரும் வெளியேறியது இல்லை.

    கே: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் அ.தி.மு.க. ஏதேனும் பேச்சு வார்த்தை நடத்துகிறதா?

    ப: தற்போது இந்த வி‌ஷயம் (தகுதி நீக்கம்) கோர்ட்டில் இருக்கிறது. இது சம்பந்தமான தீர்ப்பு வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கட்சி முடிவு செய்யும்.

    கே: 18 எம்.எல்.ஏ.க்களும் திரும்ப வருவார்கள் என்று நம்புகிறீர்களா?

    ப: கட்சியின் நலனை அவர்கள் உண்மையாக விரும்புபவர்களாக இருந்தால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மீது உண்மையான அன்பு இருந்தால் அவர்கள் கட்சிக்கு திரும்ப வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #18MLAs #TNMinister #Jayakumar
    Next Story
    ×