search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை தண்ணீரை 12-ந்தேதி திறக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
    X

    மேட்டூர் அணை தண்ணீரை 12-ந்தேதி திறக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

    காவிரி டெல்டா விவசாயிகளின் நீர்ப்பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #MetturDam #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் பல்வேறு சாக்குபோக்குகளைச் சொல்லி, வேண்டுமென்றே தாமதப்படுத்தி, 104 நாட்கள் கடந்த நிலையில், காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைக்கும் அரசிதழினை மத்திய அரசு அரை குறை மனதோடு வெளியிட்டிருப்பது, ஓரளவு ஆறுதலை தருவதாக உள்ளது.

    உச்சநீதிமன்றம் 16.2.2018ல் அளித்த இறுதித்தீர்ப்பின்படி வரைவுத் திட்டத்தை அளிக்க, தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும், விவசாயிகளின் அமைப்புகளும், பொது மக்களும், வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் தொடர்ச்சியாக நடத்திய போராட்டங்களுக்குக் கிடைத்த முதல் கட்ட வெற்றியாகவே, கடந்த 18.5.2018 அன்று உச்ச நீதிமன்றத்தால் இறுதி செய்யப்பட்ட வரைவுத் திட்டம் அமைந்தது.

    ஜூன் 1 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமே கூறியிருந்த நிலையில், இந்த இடைப்பட்ட 13 நாட்களில் மாநிலங்களில் இருந்து ஆணையத்தில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டிய பெயர்களையும் பெற்று, தலைவர், உறுப்பினர்கள் யார் யார் என்ற விவரத்துடன் முழுமையாக காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்திருக்க வேண்டும்.

    ஆனால், அப்படி செய்யாமல் இறுதி வரைவுத் திட்டத்தின் அடிப்படையில் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் என்பது மட்டுமே அரசிதழில் வெளியாகியிருக்கிறது.

    இதுதவிர, ஏற்கனவே 19.2.2013 அன்று அரசிதழில் வெளியிடப்பட்ட காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் திருத்தப்பட்டுள்ளது. இப்படி திருத்தப்பட்ட காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பில், மாநிலங்களுக்கு இடையிலான நீர் ஒதுக்கீடு விவரங்கள் இடம் பெற்றுள்ளன. அந்த திருத்தப்பட்ட இறுதித்தீர்ப்பின் நீர் பங்கீட்டு அளவுகள், மத்திய அரசின் இந்த அரசிதழிலும் இடம்பெறவில்லை. தனியாகவும் திருத்தப்பட்ட காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பிற்கு அரசிதழ் வெளியாகவில்லை.

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 9 உறுப்பினர்களில் 5 பேர், அதாவது பெரும்பான்மை உறுப்பினர்கள் மத்திய அரசை சார்ந்தவர்கள் என்பதால், ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாடு உறுதி செய்யப்படுவதற்கு எந்தவித உத்தரவாதமும் வரைவுத் திட்டத்திலோ, ஆணையம் அமைக்கும் அரசிதழிலோ இடம்பெறவில்லை. அவர்கள் மத்திய பாஜக அரசின் எண்ணத்தைத்தான் செயல்படுத்துவார்கள் என்ற கருத்தை ஒதுக்கிவிட முடியாது.

    ஆகவே, மத்திய பா.ஜ.க. அரசு ஏதோ உள்நோக்கத்துடன் இன்னும் தெளிவின்மையையும், குழப்பத்தையும், தாமதத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் தமிழக மக்களின் மனதில் எழுகிறது.


    இந்த ஆணையம் அமைக்கும் அரசிதழ் தமிழக மக்களுக்கு கிடைத்த முதல்நிலை வெற்றி என்றாலும், வருகின்ற ஜூன் 12 ஆம் தேதியன்று குறுவைப் பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டால்தான் அது ஓரளவுக்கேனும் மனநிறைவை ஏற்படுத்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இல்லாவிட்டால் “பெருவெற்றி” என்று கொண்டாடுவதில் பொருளில்லை. கொண்டாடினால், “சர்க்கரை” என்று காகிதத்தில் எழுதிவைத்துக் கொண்டு, “ஆகா! இனிக்கிறது, இனிக்கிறது”, என்று தானும் ஏமாந்து, மற்றவர்களையும் ஏமாற்றுவதற்குச் சமமாகிவிடும்.

    எனவே, தலைவர், உறுப்பினர்கள் கொண்ட காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைத்து உடனடியாகச் செயல்பாட்டுக்கு வருமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அணைகளை அதன் கட்டுப்பாட்டின்கீழ்க் கொண்டுவந்து, சுதந்திரமான தன்னாட்சி அதிகாரங்கள் இருக்கும் அளவிற்கு விரிவான விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும், உச்சநீதிமன்றத்தால் திருத்தப்பட்ட காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பின் அடிப்படையிலான நீர்ப்பங்கீடுகள் குறித்து ஓர் அரசிதழ் வெளியிட வேண்டும் என்றும் மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

    இப்போதாவது, அதற்கான முழுமூச்சிலான நடவடிக்கைகளில், பாஜக அரசிடம் கைகட்டிச் சேவகம் செய்வதை மறந்து, தன்மானத்தோடு தலைநிமிர்ந்து, அதிமுக அரசு உடனடியாக ஈடுபட்டு, ஜூன் 12 ஆம் தேதி காவிரி டெல்டா விவசாயிகளின் நீர்ப்பாசனத்திற்கு மேட்டூர் அணையைத் திறப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #MetturDam #DMK #MKStalin
    Next Story
    ×