search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    எண்ணங்களின் பிரதிபலிப்பே நம்முடைய வாழ்க்கை
    X

    எண்ணங்களின் பிரதிபலிப்பே நம்முடைய வாழ்க்கை

    எண்ணம் போல் வாழ்வு என்பார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மைதான். நம் எண்ணங்களில் எவையெல்லாம் நீந்துகின்றனவோ அவைகளே வாழ்க்கையில் நடக்கும்.
    நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களும், நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் நம்முடைய எண்ணங்களின் பிரதிபலிப்பே என்கிறார் அறிஞர் ஆலன் கோஹென்.

    அது எப்படி நடக்கும். விளக்கமாக கூறுங்களேன்...

    ஒரு விஷயம் உண்மை என்பதோ பொய் என்பதோ நீங்கள் பார்க்கும் பார்வையில் இல்லை, காதால் கேட்பதில் இல்லை. தீர விசாரிப்பதில்தான் இருக்கிறது.
    விசாரணை என்றால் வேறு யாரிடமும் அல்ல. உங்களிடம்தான்... அதாவது உங்கள் ஆழ் மனதிடம். உங்கள் ஆழ் மனதில் உள்ள எண்ணங்களை பொறுத்துதான் நீங்கள் காணும் விசயம் அமைகிறது.

    என்ன குழப்பமாக இருக்கிறதா? உங்களை சுற்றிலும் இருந்து நீங்கள் அறிந்தும் அறியாத நிலையிலும் ஒரு நிமிடத்திற்கு 400 மில்லியன் தகவல் துணுக்குகள் கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய ஐம்பூலங்கள் மூலமாக உங்களை வந்தடைகிறது. இதில் வெறும் 2000 தகவல்களை மட்டுமே உங்கள் மனதால் கிரகிக்க முடியும். சுற்றிலும் இருந்து செய்திகள் வந்து விழுந்தாலும் உங்கள் மனதுக்குள் இருக்கும் தகவல் வடிகட்டி அவற்றை எல்லாம் பல வகைகளில் பிரித்து வடிகட்டி உங்களுக்குள் அனுப்புகிறது.

    உங்களுக்கு எதில் விருப்பமும் ஈடுபாடும் இருக்கிறதோ, உங்கள் கவனம் எதை நோக்கி செல்லுகிறதோ, உங்கள் மனம் எதை ஈர்க்கிறதோ என்பதை பொறுத்து அத்தகைய செய்திகளை மட்டும் எடுத்துக் கொள்கிறது. இது ஆளுக்கு ஆள் மாறுபடும். அதனால்தான் ஒரு விஷயம் குறித்து எல்லோரும் ஒரே கருத்தை தெரிவிப்பதில்லை. தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு கூறுகிறார்கள்.

    உதாரணமாக ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு பலதரப்பட்ட மக்களும் வருகிறார்கள். ஆனால் எல்லோரும் ஒரே பொருளை வாங்குவதில்லை. கணவன்-மனைவி குழந்தைகள் என குடும்பத்துடன் சென்றாலும் ஒவ்வொருவருடைய தேவையும் வெவ்வேறாகத்தான் இருக்கும். அப்படித்தான் மனமும் தன்னை சுற்றி வரும் செய்திகளில் தனக்கு பரிச்சயமானதை, விருப்பமானதை மட்டும் வடிகட்டி எடுக்குக்கொள்ளும்.

    இதில் மனம் எப்படி செயல்படுகிறது?

    நீக்குதல், விலக்குதல், பொதுமைப் படுத்துதல் ஆகிய மூன்று விதங்களில் மனம் தகவல்களை வடிகட்டுகிறது. முதலில் நீக்குதல் என்பதை பார்ப்போம். உங்கள் சிந்தனை நேர்மறையாக இருந்தால் உங்களை சுற்றிலும் நடக்கும் விஷயங்களில் நேர் மறையானவற்றை மட்டும் தனக்குள் ஈர்க்கும். உங்கள் சிந்தனை எதிர்மறையாக இருந்தால் அத்தகைய எதிர்மறையான செய்திகளை மட்டுமே கவரும்.

    உதாரணமாக ஒருவர் உங்களை புகழ்ந்து பாராட்டினால் உங்களுக்கு நேர்மறை எண்ணம் இருந்தால் அதை நினைத்து மகிழும். எதிர்மறை எண்ணம் இருந்தால் இவர் நம்மை புகழ்வது போல் இகழ்கிறாரோ என்று நினைத்து மனம் அங்கலாய்க்கும். அடுத்து விலகுதல், இது உங் களை சுற்றி என்ன நடந் தாலும் இவர்கள் இப்படிதான் சொன்னார்கள், இது இப்படித்தான் நடந்தது என்று நினைக்கும் உங்கள் மனம் அதை தான் விரும்பவது போல் மாற்றி எடுத்துக்கொள்ளும்.

    நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் மேல் அதிகாரியிடம் 2 நாட்கள் லீவு கேட்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர் அவசியம் லீவு வேணுமா? என்று கேட்கிறார். அந்த சமயத்தில் நீங்கள் நேர்மறை சிந்தனையுடன் இருந்தால் உங்கள் மனம் லீவு தருவார், ஆனால் விளக்கம் கேட்கிறாரே என்று எண்ண வைக்கும். எதிர்மறை எண்ணத்துடன் இருந்தால் லீவு தரமாட்டார் என்று நினைத்து வருந்தச் செய்யும்.

    எனவே நேர்மறை சிந்தனை கொண்டிருந்தால் எந்த சூழலையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும். அவர்கள் மனம் சாதகமான செய்திகளை மட்டுமே தனக்குள் எடுத்துக்கொள்ளும். அது எப்படி சொல்லப்பட்டாலும் தனக்கு ஏற்ப நேர்மறையாக மாற்றிக் கொள்ளும். நேர்மறையான நல்ல எண்ணங்கள் கொண்டவர்களையே தன்னிடம் ஈர்க்கும்.

    அதுவே எதிர்மறை சிந்தனை கொண்டிருந்தால் நல்லதே நடந்தாலும் அதனை எதிர்மறை விஷயமாக எண்ண வைக்கும். எதிர்மறையான மனிதர்களையும் செயல்களையுமே தன்பால் ஈர்க்கும். அவர்கள் மனம் அவ்வாறே செயல்படும். அதனால்தான் இனம் இனத்தோடு சேரும் என்பார்கள். சூழ்நிலையை கையாளும் விதத் தில்தான் உங்கள் வாழ்வின் வெற்றியும் தோல்வியும் அமைகிறது. நல்லவற்றை நினைத்தால் நல்லதே நடக்கும். எதிர்மறை எண்ணம் கொண்டிருந்தால் எதிலும் அதிருப்தியே நிலவும்.

    அடுத்து பொதுமைப்படுத்துதல் குறித்து பார்ப்போம். உங்கள் வாழ்க் கையில் எதிர்மறையான விஷயங்கள் தொடர்ந்து ஒரிரு முறை நிகழ்ந்து விட்டால் அதன் பிறகு உங்கள் மனம் இனி எப்போதும் அப்படியே தான் நடக்கும் என்று நினைத்து வருத்தப்படும். இதனால் அடுத்து எடுக்கும் எந்த முயற்சிக்கும் ஒத்துழைக்காமல் முரண்டு செய்யும். உங்கள் மனம் எல்லாவற்றையும் எதிர்மறையாகவே பொதுமைப் படுத்தி பார்ப்பதால் உண்டாகும் பிரச்சினை இது.

    எனவே அடுத்த முறை உங்கள் மனம் “ஏன் எனக்கு மட்டும் எப்போதும் இப்படி நடக்கிறது-?” என வருந்தும் போது, நீங்கள் விழிப்புணர்வோடு இருந்து “எப்போதுமேவா இப்படி நடக்கிறது?” என்ற எதிர் கேள்வியை அதனிடம் கேளுங்கள். அவ்வளவுதான். உங்கள் வாழ்க்கை பயணத்தில் உங்களுடைய முயற்சிகள் வெற்றி பெற்ற தருணங்களும் நினைவுக்கு வரும். எப்போதும் தோல்வியே தொடரவில்லை. பல முறை வெற்றியும் பெற்றிருக்கிறோம் என்பது புரியும்.
    இப்படி பகுப்பாய்வு செய்தால் மனதுக்குள் தன்னம்பிக்கை பிறக்கும். அடுத்த முயற்சிக்கு உங்கள் மனம் தயாராகும். பிறகு என்ன? தொட்டக் காரியம் எல்லாம் வெற்றிதான்.

    பொதுவாக அனைவரது மனமும் பாராட்டை, தட்டிக்கொடுத்தலை விரும்பும். அதே சமயம் பிறரது குறைகளை கண்டுபிடிப்பதே பாராட்டை பெறுவதற்கான எளிய வழி என்று நினைப்பதால் மனம் குறைகளையே ஈர்க்கிறது. அதுவே மற்றவர்களை மனம் விட்டு பாராட்டும் போது அவர்கள் மனம் மகிழும். அதோடு உங்கள் மனதும் அதனை ஈர்த்து உங்களை மகிழ் விக்கும்.

    உங்கள் மனம் நேர்மறை சிந்தனை உடையதாக இருந்தால் நீங்கள் எதை பார்த்தாலும் அதிலிருக்கும் நல்லவை மட்டுமே உங்கள் கண்களுக்கு தென்படும். நீங்கள் எதை கேட்டாலும் அதிலுள்ள நல்லவை மட்டுமே உங்கள் செவியில் நுழைந்து மனதில் புகும். எனவே நம் மனதை எப்போதும் நேர்மறை எண்ணங்களால் நிரப்பி வைத்து இருந்தால் நல்லவையே உங்களை சூழ்ந்து நிகழும். நல்லவர்களே உங்களை நாடி வருவார்கள். நல்லவையே உங்களை வந்தடையும். மகிழ்ச்சியுடன் நிறைவாக வாழலாம்.

    Email:fajila@hotmil.com
    Next Story
    ×