search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    • குழந்தைகள் விரும்பி சாப்பிடக் கூடிய இனிப்புகளில் ஒன்று சேமியா கேசரி.
    • மாலை வேளையில் தேனீருடன் சுவைக்கலாம்.

    குழந்தைகள் பலரும் விரும்பி சாப்பிடக் கூடிய இனிப்புகளில் ஒன்று தான் சேமியா கேசரி. இதனை மாலை வேளையில் தேனீருடன் சுவைக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    சேமியா - 500 கிராம்

    சர்க்கரை - 400 கிராம்

    நெய் - தேவையான அளவு

    முந்திரி, பாதாம் - 2 (தேவையான அளவு)

    ஏலக்காய் - ஒரு ஸ்பூன்

    குங்குமப்பூ - சிறிதளவு

    செய்முறை:

    அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி அதில் முந்திரி, பாதாம் சேர்த்து வறுக்க வேண்டும். அதனுடன் சேமியாவையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். பின்னர் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சேமியாவை வேக வைக்க வேண்டும்.

    அதன்பிறகு சேமியா வெந்த பிறகு சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளற வேண்டும். அதனுடன் பாலில் குங்குமப்பூ சேர்த்து கலந்து சேமியா கேசரியில் சேர்க்க வேண்டும். நன்றாக கிளறி இறக்கினால் சேமியா கேசரி தயார்.

    • உஷ்ணத்தை தணிப்பதற்கு மிகவும் உதவியாக இருப்பது இளநீர்.
    • வித்தியாசமாக இளநீர் அல்வா செய்யலாம் வாங்க.

    உடல் உஷ்ணத்தை தணிப்பதற்கு மிகவும் உதவியாக இருப்பது இளநீர். இந்த இளநீரை வைத்து பலர் இளநீர் பாயாசம், இளநீர் சர்பத் போன்றவற்றை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். அதுமட்டுமில்லாமல் இதுவரை நீங்கள் எத்தனையோ அல்வாவை சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக இளநீர் அல்வா செய்யலாம் வாங்க. இது பார்ப்பதற்கு கிளாசியா இருப்பது மட்டுல்ல சுவைப்பதற்கு சூப்பராக இருக்கும். நாக்கில் வைத்தவுடன் கரைந்துவிடும் அளவிற்கு சுவையாக இருகும் இந்த இளநீர் அல்வா.

    தேவையான பொருட்கள்:

    இளநீர்- 1

    கார்ன்பிளார் மாவு- ஒரு கப்

    சர்க்கரை- அரை கப்

    ஏலக்காய் தூள்- ஒரு ஸ்பூன்

    முந்திரி, பாதாம்- 10

    செய்முறை:

    ஒரு பவுலில் இளநீரின் தண்ணீரை ஊற்றி அதில் கான்பிளார் மாவினை கட்டி இல்லாமல் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் முந்திரி, பாதாம் துண்டுகளை போட்டு வறுத்து எடுத்து தனியே வைத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு மீண்டும் அதே வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி அதில் நாம் ஏற்கனவே கரைத்து வைத்துள்ள இளநீர் கலவையினை ஊற்ற வேண்டும். இதனை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இந்த கலவை சிறிது கெட்டியாக ஆரம்பித்தவுடன் அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கிளற வேண்டும்.

    பின்னர் இளநீர் துண்டுகளில் உள்ள வலுக்கைகளை சிறிது சிறிதாக பொடித்து அந்த அல்வாவில் சேர்க்க வேண்டும். இளநீர் அல்வா கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன் நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி, பாதாம் மற்று சிறிதளவு நெய் சேர்த்து கிளறி இறக்கலாம்.

    அல்வா சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். கண்டிப்பாக இளநீர் பிரியர்களுக்கு ஃபேவரட் அல்வாவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    • ஜப்பான் சிக்கன் இணையம் முழுவதும் பிரபலமாகி வருகிறது.
    • பல உணவகங்கள் தங்கள் மெனுவில் சேர்க்கத் தொடங்கி உள்ளன.

    ஜப்பான் சிக்கன் இணையம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. இது அம்மன் மெஸ் எனப்படும் ஈரோடு உணவகத்தில் பிரபலமான உணவு. இந்த உணவு இணையத்தில் மிகவும் புகழ் பெற்று வருகிறது தமிழகம் முழுவதும் உள்ள பல உணவகங்கள் இதை தங்கள் மெனுவில் சேர்க்கத் தொடங்கி உள்ளன. இந்த வித்தியாசமான மற்றும் சுவையான ஜப்பான் சிக்கன் வீட்டிலேயே எப்படி செய்வதென்று பார்ப்போம்...

    தேவையான பொருட்கள்:

    சிக்கன்- அரை கிலோ

    மைதா- 3 ஸ்பூன்

    சோள மாவு- 2 ஸ்பூன்

    மிளகு-1 டீஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய்- தேவையான அளவு

    வெண்ணெய்- 3 டீஸ்பூன்

    பூண்டு- 3 பல்

    பச்சை மிளகாய்- 2

    பால்- 1/2 லிட்டர்

    முந்திரி- 10

    சர்க்கரை-1 டீஸ்பூன்

    கொத்தமல்லி இலை- சிறிதளவு

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் கழுவி வைத்துள்ள சிக்கன், மைதா, சோள மாவு, உப்பு, மிளகுதூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும். இதனை 30 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.

    பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் கலந்துவைத்துள்ள சிக்கனை பொன்னிறமாக பொறித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    முந்திரியை மிக்சி ஜாரில் போட்டு பொடித்துக்கொள்ள வேண்டும்.

    அடுத்து மற்றொரு கடாயில் வெண்ணெய் சேர்த்து நறுக்கிய பூண்டு, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். வதங்கிய பின்பு அதில் காய்ச்சி ஆறவைத்த பால் மற்றும் பொத்த முந்திரியை சேர்த்து கிளற வேண்டும்.

    இதனைத்தொடர்ந்து அதில் தேவையான அளவு உப்பு மற்றும் 1 டீஸ்பூன் சர்க்கரை, மிளகுத்தூள் சேர்த்து கிளறி கடைசியாக பொரித்த சிக்கனை சேர்க்க வேண்டும்.

    இறுதியாக கிரேவி பதத்திற்கு வந்ததும் அதில் கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான ஜப்பான் சிக்கன் தயார்.

    • உடல் எடையை குறைக்க உதவும் குதிரைவாலி ராகி களி.
    • உடலுக்கு தேவையான புரதச்சத்து, நார்ச்சத்தை கொண்டுள்ளது.

    அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது கம்பு, சோளம், வரகு, சாமை, திணை, குதிரைவாலி, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் நம் உடலுக்கு தேவையான புரதச்சத்து மற்றும் நார்ச்சத்தை அதிகம் கொண்டுள்ளது. இதனை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்தக் கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.

    தேவையான பொருட்கள்:

    குதிரைவாலி அரிசி- ஒரு கப்

    கேழ்வரகு மாவு- ஒன்றரை கப்

    உப்பு- தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் குதிரைவாலி அரிசியை 3 முறை நன்றாக கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை அரைமணிநேரம் மூடி போட்டு ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு பங்கிற்கு 3 மக்டங்கு தண்ணீர்விட்டு வேக வைத்துக்கொள்ள வேண்டும். அரைப் பதத்திற்கு அரிசி வெந்தவுடன் கேழ்வரகு மாவைச் சேர்த்து கெட்டி இல்லாமல் மிதமான தீயில் வைத்து  கிளற வேண்டும். பருப்பு மத்து கொண்டு நன்றாக கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

    அவ்வாறு கிளறும்போது ஒட்டாமல் நன்றாக வெந்துவரும் அப்போது தண்ணீரில் கையை நனைத்துவிட்டு, களியை தொட்டுப்பார்த்தால், அது கையில் ஒட்டாமல், அல்வா பதத்தில் இருக்கவேண்டும். குதிரைவாலி ராகி களி தயார்.

    இந்த களியை கீரைக்குழம்பு, மீன்குழம்பு, கறிக்குழம்பு, கருவாட்டுக்குழம்பு ஆகியவை வைத்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும். ஆனால் உடல் எடை குறைக்கும் முயற்சியை மேற்கொள்பவர்கள் இதனை மோரில் சின்னவெங்காயம் சேர்த்து இந்த களியையும் கரைத்து காலை வேளைகளில் குடிக்கலாம். கீரை வகைகளை சைட் டிஷ்சாக வைத்து மதிய சாப்பாடாகவும் சாப்பிடலாம்.

     பலன்கள்

    கால்சியம் இருப்பதால் எலும்புகளுக்கு வலு சேர்க்கும். இரும்புச்சத்து இருப்பதால் ரத்த உற்பத்திக்கு உதவும். கொழுப்பைக் குறைக்கும். குதிரைவாலியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்னை வராமல் தடுக்கும். கேழ்வரகு உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தந்து வலுவைச் சேர்க்கும். எடை குறைக்க நினைப்பவர்கள் தினமும் சாப்பிடலாம். பெண்கள், இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்ல உணவு.

    • உணவு பிரியர்களுக்கு மட்டுமின்றி பலருக்கும் மிகவும் பிடிக்கும்.
    • பலவிதமான சிக்கன் சைடிஷ்களை செய்திருப்போம்.

    சிக்கனை வைத்து செய்யப்படும் அனைத்து உணவுகளும் பொதுவாக உணவு பிரியர்களுக்கு மட்டுமின்றி பலருக்கும் மிகவும் பிடித்தமான உணவாக இருக்கும். பொதுவாக நாம் பலவிதமான சிக்கன் சைடிஷ்களை சப்பாத்தி, நான், புல்கா, மற்றும் பரோட்டாவிற்கு செய்து சுவைத்து இருப்போம். ஆனால் நாம் இன்று இங்கு காண இருப்பது சிக்கன் மலாய் கறி.

    தேவையான பொருட்கள்:

    தயிர்- 1 கப்

    பெரிய வெங்காயம்- 2

    பச்சை மிளகாய்- 2 to 3

    பூண்டு- 6 பல்

    இஞ்சி- 2 துண்டு

    மஞ்சள் தூள்- ¼ மேஜைக்கரண்டி

    மல்லி தூள்- 2 மேஜைக்கரண்டி

    கரம் மசாலா- 1 மேஜைக்கரண்டி

    க்ரீம்- 2 மேஜைக்கரண்டி

    முந்திரி- 8 to 10

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய்- தேவையான அளவு

    கொத்தமல்லி- சிறிதளவு

    கருவேப்பிலை- சிறிதளவு

    செய்முறை:

    முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, மற்றும் கருவேப்பிலையை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் சிக்கனை நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ள வேண்டும்.

    அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து மிதமான அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு நன்கு பொன் நிறம் ஆகும் வரை அதை வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு பொன்னிறம் ஆனதும் அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து ஒரு தட்டில் கொட்டி நன்கு பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விட வேண்டும்.

    இப்பொழுது முந்திரி பருப்புகளை எடுத்து அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு பேஸ்ட் ஆக்கி எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ள வேண்டும்.

    பின்னர் நாம் நன்கு சுத்தம் செய்து கழுவி வைத்திருக்கும் சிக்கனை எடுத்து ஒரு பவுலில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா, மற்றும் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாயை போட்டு அதை நன்கு கலந்து விடவும். பின்னர் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் முந்திரி பேஸ்ட்,  நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு மணி நேரத்தில் இருந்து ஒன்றரை மணி நேரம் வரை அதை ஊற விடவும்.

    ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 3 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை பக்குவமாக கொட்டி அதை நன்கு கிளறி விட்டு  வேக விட வேண்டும்.

    இப்பொழுது நாம் வதக்கி ஆற வைத்திருக்கும் வெங்காயத்தை எடுத்து அதை நன்கு கைகளின் மூலம் நசுக்கி வைத்து கொள்ளவும். அதன்பிறகு அதில் நாம் நசுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு அதை நன்கு கலந்து விட்டு மீண்டும் வேக விடவும். (மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை அதை வேக விடவும்.)

    பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு ஒரு மூடி போட்டு அடுப்பை குறைத்து விட்டு அதை சுமார் 12 லிருந்து 15 நிமிடம் வரை வேக விட வேண்டும். 15 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதை ஒரு கிளறு கிளறி பின்பு அதில் ஃபிரஷ் க்ரீம்- ஐ சேர்த்து நன்கு கிளறி விட்டு சுமார் 3 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.

    பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை தூவி விடவும். பின்னர் அடுப்பை அணைத்து விட்டு சிக்கன் மலாய் கறியை அடுப்பிலிருந்து கீழே இறக்கி ஒரு தட்டில் வைத்து அதை சப்பாத்தி அல்லது நான் உடன் சுடச் சுடபரிமாறவும்.

    இப்பொழுது சூடான மற்றும் மிகவும் சுவையான சிக்கன் மலாய் கறி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.


    • முட்டையை அனைவரும் விரும்பி சாப்பிடுவோம்.
    • மிகவும் ஸ்பெஷலானது முட்டை மசாலாதான்.

    நமக்குத் தேவையான அனைத்து வைட்டமின் சத்துகளும் நிறைந்த `உலகின் மிகச் சிறந்த உணவு வகைகளில் ஒன்று முட்டை. முட்டையை அனைவரும் விரும்பி சாப்பிடுவோம். அதில் மிகவும் ஸ்பெஷலானது முட்டை மசாலாதான். அதுவும் தபாக்களில் செய்யப்படும் முட்டை மசாலா அதன் சுவையே தனி தான். அந்த தாபா ஸ்டைல் ஸ்பெஷல் முட்டை குழம்பு வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளலாம்.

    தேவையான பொருட்கள் :

    வேகவைத்த முட்டை - 6

    பெரிய வெங்காயம் - 2

    தக்காளி விழுது - 3

    பூண்டு - 2 டீஸ்பூன் (நறுக்கியது)

    இஞ்சி - 2 டீஸ்பூன் (நறுக்கியது)

    கடலை மாவு - 2 டீஸ்பூன்

    சிவப்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி

    சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்

    காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

    கரம் மசாலா தூள் - 3/4 டீஸ்பூன்

    கசூரி மேத்தி (உலர்ந்த வறுத்து பொடித்தது) - 1 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    காய்ந்த சிவப்பு மிளகாய் - 2

    எண்ணெய் - 3 டீஸ்பூன்

    வெண்ணெய் - 1 டீஸ்பூன்

    நறுக்கிய கொத்தமல்லி இலை - 3-4 டீஸ்பூன்

    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை :

    மசாலாவிற்கு தேவையான வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை நன்றாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு நன்கு பழுத்த தக்காளியை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அடுப்பில் ஒரு வாணலியை வைத்து கசூரி மேத்தியை போட்டு 30 வினாடிகள் வறுத்து ஆறவைத்து கரடுமுரடான பொடியாக நசுக்கி எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி முட்டைகளை போட்டு வேகவைத்து அதன் ஓட்டை நீக்கி கொள்ள வேண்டும்.

    பின்னர் அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளற வேண்டும். இப்போது வேகவைத்த முட்டைகளை அதனுடன் சேர்த்து குறைந்த வெப்பத்தில் 1-2 நிமிடங்களுக்கு பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அடுத்து மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் மற்றும் காய்ந்த சிவப்பு மிளகாய் சேர்க்க வேண்டும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வெங்காயம் வெளிர் பழுப்பு நிறமாக மாறும் வரை சிறிதளவு உப்பு சேர்த்து சுமார் 8 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வதக்க வேண்டும்.

    வெங்காயம் பொன்னிறமாக மாறியவுடன் நறுக்கிய இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து குறைந்த வெப்பத்தில் மற்றொரு 2 நிமிடங்களுக்கு வதக்கவும். இப்போது அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதைச் சேர்த்து நன்கு கலந்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். தக்காளி முழுவதுமாக வெந்து தொக்கு பதத்திற்கு எண்ணெய் பிரியும் வரை நன்கு சமைக்க வேண்டும்.

    பிறகு அதில் 2 டீஸ்பூன் கடலை மாவை 2 டேபிள் ஸ்பூன் தண்ணீரில் கலந்து சேர்த்து குறைந்த வெப்பத்தில் 2-3 நிமிடங்கள் தொடர்ந்து கிளறி வதக்க வேண்டும். அடுத்து அதில் 200 மில்லி தண்ணீரைச் சேர்த்து அதனுடன் காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் வறுத்த கசூரி மேத்தி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து மிதமான தீயில் ஒரு நிமிடத்திற்கு சமைக்கவும்.

    தற்போது வறுத்துவைத்துள்ள முட்டைகளை அதில் போட்டு நன்கு கலந்து மூடி வைத்து சுமார் 5 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் சமைக்க வேண்டும். அதனுடன் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்து கலந்து மேலும் இரண்டு நிமிடங்களுக்கு குறைந்த தீயில் வைத்து சமைத்து இறக்க வேண்டும்.

    `தாபா ஸ்டைல் முட்டை மசாலா' தயார்… இதை நீங்கள் சப்பாத்தி, தோசை, இட்லி, ரொட்டி அல்லது சாதத்துடன் சூடாக பரிமாறவும்.

    • தாவரங்களில் இருக்கும் புரதத்தை தனியாக பிரித்து எடுத்து தயாரிக்கப்படுகிறது.
    • சுவை விலங்குகளின் மாமிசத்தைப் போலவே இருக்கும்.

    சைவ இறைச்சி என்பது தாவர இறைச்சி என்றும் அழைக்கப்படுகிறது. இது தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. தாவரங்களில் இருந்து, சில கூறுகள் எடுக்கப்பட்டு, இதன் மூலம் சிறப்பு தொழில்நுட்பம் மூலம் சைவ இறைச்சி தயாரிக்கப்படுகிறது

    மீன், கோழி, ஆடு போன்றவற்றின் இறைச்சியைப் போலவே தாவரங்களில் இருக்கும் புரதத்தை தனியாக பிரித்து எடுத்து தயாரிக்கப்படுவதை 'தாவர இறைச்சி' அல்லது 'சைவ இறைச்சி' என்று அழைக்கிறோம். இதன் சுவை விலங்குகளின் மாமிசத்தைப் போலவே இருக்கும். தாவர இறைச்சி பெரும்பாலும் சோயா, காளான், பீன்ஸ், கோதுமை ஆகிய மூலப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

    இறைச்சியின் சிவப்பு நிறத்தை பிரதிபலிக்க இதனுடன் மாதுளைப்பொடி, பீட்ரூட் சாறு, சோயா லெகிமோ குளோபின் போன்ற நிறமிகள் கலக்கப்படுகின்றன.

    சமீபகாலமாகவே தாவர இறைச்சியை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். சர்வதேச சந்தையிலும் இதற்கு வரவேற்பு இருக்கிறது. இருப்பினும், தாவர இறைச்சி உடலுக்கு நல்லதா என்ற கேள்வியும் பலரிடம் இருக்கிறது. இதுகுறித்த தகவல்கள் இங்கே...

    மாமிச உணவை தவிர்க்க நினைப்பவர்களுக்கும், உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கும் அசைவ பிரியர்களுக்கும் தாவர இறைச்சி ஒரு மாற்று உணவாகும். விலங்குகளின் மூலம் கிடைக்கும் இறைச்சியின் ருசியையும் இது ஈடுசெய்யும். தாவர இறைச்சியில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

    விலங்கு இறைச்சியுடன் ஒப்பிடும்போது தாவர இறைச்சியில் நார்ச்சத்து, வைட்டமின் சி. பிளேவனாய்டுகள் போன்ற சத்துகள் அதிகமாக இருக்கின்றன. அதேசமயம் விலங்கு இறைச்சியில் இருந்து பெறப்படும் இரும்பு, வைட்டமின் டி துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் தாவர இறைச்சியில் குறைந்த அளவே உள்ளன.

    எனவே தாவர இறைச்சி சாப்பிடும் நாட்களில் பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லது. இவ்வாறு சாப்பிடும்போது தாவர இறைச்சியில் கிடைக்காத ஊட்டச்சத்துக்களை மற்ற உணவுகள் சமன் செய்யும்.

    தாவர இறைச்சியில் இருக்கும் நார்ச்சத்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும். இதன் மூலம் இதயநோய், புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறையும்.

     சோயா, காளான், பீன்ஸ் போன்றவை மட்டுமல்லாமல் பருப்பு வகைகள், கொண்டைக்கடலை, உருளைக் கிழங்கு. சிலவகை தாவர எண்ணெய்கள், மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களை கலந்தும் தாவர இறைச்சி தயாரிக்கப்படுகிறது. எனவே தாவர இறைச்சியை வாங்கும்போது குறைந்த உப்பு, அதிக நார்ச்சத்து நிறைந்த தயாரிப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    விலங்கு இறைச்சியுடன் ஒப்பிடும்போது தாவர இறைச்சியில் உள்ள புரதத்தை மனித உடலால் குறைவான அளவே உட்கிரகிக்க முடியும். தாவர இறைச்சி செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இருப்பினும் அது செரிமானம் ஆகும் தன்மையானது.

    சமைக்கும் முறை, சமைப்பதற்காக தாவர இறைச்சியில் சேர்க்கப்படும் பொருட்கள். சாப்பிடுபவரின் செரிமான சக்தி ஆகியவற்றை பொறுத்து மாறக்கூடும். விலங்குகளில் இருந்து கிடைக்கும் இறைச்சியுடன் ஒப்பிடும்போது. தாவர இறைச்சி சுற்றுச்சூழலில் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும்.

    • சமையல் அறையில் வசம்பு தூள் தூவி விட்டால் பூச்சிகள் வராது.
    • காய்ந்த எலுமிச்சை தோலை அலமாரியில் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

    * இறைச்சி வேகவைக்கும்போது கொஞ்சம் பாக்கு சேர்த்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

    * வெந்தயத்தை வேகவைத்து, கடைந்து தேன் கலந்து உண்டு வர தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.

    * காலிபிளவர் சமைக்கும்போது கொஞ்சம் பால் சேர்த்தால் பூ போன்ற வெள்ளை நிறம் மாறாமல் இருக்கும். பச்சை வாடையும் வராது.

    * பிரிட்ஜில் மாவை வைக்கும்போது உப்பு சேர்க்கக்கூடாது. உப்பு சேர்த்தால் புளித்துவிடும்.

    * அலுமினியப் பாத்திரங்களில் அடிப்பிடிப்பு கறையை நீக்க உப்புக்காகிதம் கொண்டு தேய்த்தால் பாத்திரம் புதுசு போல மின்னும்.

    * ஒரு கைப்பிடி கல் உப்பை துணியில் கட்டி அரிசி மூட்டைக்கு அருகில் வைத்தால் பூச்சிகள் எதுவும் வராது.

    * சமையல் அறையில் வசம்பு தூள் தூவி விட்டால் பூச்சிகள் வராது.

    * எறும்பு தொந்தரவு உள்ள இடங்களில் நான்கைந்து கிராம்பை போட்டு விட்டால் எறும்புகள் வராது.

    * சீடை செய்யும்போது அதனை ஊசியால் குத்தி பின்பு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.

    * புளியை வெந்நீரில் ஊறவைத்து, பிறகு கரைத்தால் சீக்கிரமாக கரைந்துவிடும்.

    * சேப்பங்கிழங்கை வேகவைத்து தோலை அகற்றி வட்ட வடிவமாக நறுக்கி சிப்ஸ் செய்தால் மொறு மொறுவென இருக்கும்.

    * அரிசியில் வண்டோ, புழுவோ வராமல் இருக்க வேப்பம் இலைகளைப் போட்டு வைக்கலாம்.

    * உலர்ந்த ஆரஞ்சு தோலை புகை போட்டால் வீட்டுக்குள் கொசு வராது. இது இயற்கையான கொசு விரட்டி.

    * பூஜை செய்யும்போது வீட்டில் புகை அதிகமாக இருந்தால் ஒரு ஈரத்துணியை தொங்கவிடுங்கள். புகை காணாமல் போய்விடும்.

    * சப்பாத்திக்கு மாவு பிசையும் முன்னால் கையில் கொஞ்சம் உப்பை தடவிக்கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.

    * உருளைக்கிழங்கை வேகவைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் அவை ஜொலிக்கும்.

    * காய்ந்த எலுமிச்சை தோலை அலமாரியில் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

    • உடலுக்கு வேண்டிய சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும்.
    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.

    எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது விஷேச நிகழ்வுகளை மேலும் சிறப்பானதாக செய்வது விடும்.

    கீர் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய இனிப்பு வகையாகும். கேரட் கீர், கோதுமை கீர், ரவை கீர் போன்ற பல கீர், கீர் வகைகள் உள்ளது. மற்ற பழங்களைக் காட்டிலும் அதிக மருத்துவ குணம் கொண்ட அத்திப்பழத்தை பயன்படுத்தி இனிப்பான கீர் செய்வது பற்றி பார்க்கலாம்.

    மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு எனர்ஜி பானமாக, வீட்டில் உலர்ந்த அத்திப்பழம் இருந்தால், அதனைக் கொண்டு கீர் செய்து கொடுங்கள். இதனால் அவர்களுக்கு உடலுக்கு வேண்டிய சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும். மேலும் இந்த கீர் அவர்கள் விரும்பி குடிக்குமாறு இருக்கும். கடைகளில் இனி வாங்குவதை விட்டுவிட்டு வீட்டிலே உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய அத்திப்பழ கீர் எப்படி செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    அத்திப்பழம்- 6

    பாதாம்- 4

    முந்திரி- 4

    குங்குமப்பூ- 1 டீஸ்பூன்

    ஏலக்காய் தூள்- 1 டீஸ்பூன்

    நெய்- தேவையான அளவு

    பால்- 3/4 லிட்டர்

    பால் பவுடர்- 2 ஸ்பூன்

    கன்டென்ஸ்டு மில்க்- 4 ஸ்பூன்

    நாட்டு சர்க்கரை- கால் கப்

    செய்முறை:

    முதலில் அத்தி பழம், முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இவற்றை சிறிதளவு தண்ணீர் விட்டு ஊற வைத்து கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் அத்திப்பழம், முந்திரி, பாதாம் விழுதை சேர்த்து சிறிது நேரம் கலந்து விடவும். பின்னர் பால் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கலந்து சிறு தீயில் வைத்து கொதிக்க வைக்கவும்.

    அதன்பிறகு ஒரு கொதி வந்தவுடன் கண்டன்ஸ்டு மில்க் மற்றும் பால் பவுடரை கட்டியில்லாமல் சேர்த்து கைவிடாமல் கலந்து விடவும். பால் நன்கு சுண்டியதும் நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க விட்டு, இறுதியாக ஏலக்காய் தூள் மற்றும் குங்குமப்பூ சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான அத்திப்பழம் கீர் தயார்.


    • சுவீட் என்றதுமே குலோப்ஜாமூனிற்கு என்று தனி இடம் உண்டு.
    • பிஸ்கட்டை வைத்து குலோப் ஜாமூன் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

    குலோப்ஜாமூன் என்றாலே எல்லாருக்கும் பிடிக்கும். சுவீட் என்றதும் குலோப் ஜாமூனிற்கு என்று தனி இடம் உண்டு. குலோப்ஜாமூன், ரசகுல்லா எல்லாம் ஒரே கேட்டகரியில் வரக்கூடிய இனிப்பு வகைகள். அந்த வகையில குலோப்ஜாமூன் என்று சொல்லும் போதே எல்லாருடைய நாக்கிலும் அதன் சுவை எச்சில் ஊற வைத்துவிடும். அந்த அளவுக்கு சுவையாக இருக்கும் குலோப்ஜாமூன்.

    குலோப் ஜாமூன் மிக்ஸ் எல்லா கடைகளில் கிடைக்கும். அதை வாங்கித் தான் எல்லோரும் எப்பவுமே செய்துகொண்டு இருக்கிறோம். அந்த வகையில் இன்றைக்கு நாம் பிஸ்கட்டை வைத்து குலோப் ஜாமூன் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். அது என்னடா பிஸ்கட் குலோப் ஜாமூன் அப்படிங்கறிங்களா. சரி வாங்க பிஸ்கட் குலோப் ஜாமூன் எப்படி செய்யலாம் என்று தெரிஞ்சுக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பிஸ்கட்- 2 பாக்கெட்

    சர்க்கரை- 1 கப்

    ஏலக்காய் தூள்- 1 சிட்டிகை

    பால்- 1/2 கப்

    எண்ணெய்- தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் மேரி பிஸ்கட் பாக்கெட்டில் உள்ள பிஸ்கட்டுகளை மிக்சி ஜாரில் சேர்த்து பொடித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சர்க்கரை சேர்த்து, தண்ணீர் ஊற்றி சர்க்கரை பாகு காய்ச்ச வேண்டும். அதில் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு பொடித்து வைத்துள்ள பிஸ்கட் பவுடரில் பாலை சிறிது சிறிதாக சேர்த்து குலாப் ஜாமுன் உருண்டைகள் உருட்டும் பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக வெடிப்பு இல்லாமல் உருட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்

    பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு காய்ச்சி வைத்துள்ள சர்க்கரைப்பாகில் பொரித்து வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து பாகை உறிந்த பின் சாப்பிட்டால் சுவையான பிஸ்கட் குலாப் ஜாமூன் தயார்.

    • வித்தியாசமாக இன்றைக்கு பீட்ரூட்டை வைத்து மோதகம்.
    • மோதகம் மிகவும் ருசியானது மட்டும் இல்லாமல், ஆரோக்கியமானது.

    விநாயகர் சதுர்த்தி என்றால் நமக்கெல்லாம் ஞாபகம் வருது மோதகம் தான் அதாவது கொழுக்கட்டை. இந்த கொழுக்கட்டையை நம்ம நிறைய வெரைட்டீஸ் செய்து சாப்பிட்டு இருப்போம். பூரணங்களை உள்ளே வைக்கும் வித்தியாச வித்தியாசமாக செய்து சாப்பிட்டு இருப்போம். மேல் இருக்கிற கொழுக்கட்டைக்கு வைக்கிற மாவில் கூட வித்தியாசமாக செய்து சாப்பிடுவோம்.

    என்றைக்காவது ஒரு நாள் காய்கறியோடு சேர்த்து இந்த மோதகத்தை செய்து சாப்பிட்டு இருப்போமா? இல்ல கொழுக்கட்டைகள் தான் செய்து இருக்கோமா? அந்த மாதிரி வித்தியாசமாக இன்றைக்கு பீட்ரூட்டை வச்சு எப்படி மோதகம் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

    இந்த மோதகம் மிகவும் ருசியானது மட்டும் இல்லாமல், ஆரோக்கியமான ஒரு மாலை நேர சிற்றுண்டியாவும் இருக்கும். இந்த மோதகம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்குமே மிகவும் பிடித்த ஒரு மோதகம்.

    தேவையான பொருட்கள்

    பச்சரிசி மாவு- 2 கப்

    பீட்ரூட்- 1

    வெல்லம்- கால் கிலோ

    கடலைப்பருப்பு- ஒரு கப்

    தேங்காய் துருவல்- 1 கப்

    ஏலக்காய்- ஒரு ஸ்பூன்

    செய்முறை:

    முதலில் பீட்ருட்டை தோலை நீக்கி விட்டு கழுவி ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்து வைத்துள்ள பீட்ருட் விழுதை வடிகட்டி எடுக்க வேண்டும். வடிகட்டிய பீட்ருட் சாறை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு அடுப்பில் ஒரு குக்கரை வைத்து கடலைப்பருப்பை கழுவி விட்டு குக்கரில் போட்டு வேக வைக்க வேண்டும். கடலைப்பருப்பு வேகும் நேரத்திற்குள் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து வடிகட்டி எடுத்து வைத்துள்ள பீட்ருட் சாரை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

    பீட்ருட் சாறு கொதித்து வரும் பொழுது அதில் எடுத்து வைத்துள்ள பச்சரிசி மாவை சேர்த்து நன்றாக கைவிடாமல் கலந்து விட வேண்டும். மாவு நன்றாக கெட்டி பதத்திற்கு வந்த பிறகு அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும். அதன்பிறகு அடுப்பில்

    வேறொரு பாத்திரத்தை வைத்து அதில் வெல்லம், சிறிதளவு தண்ணீர் சேர்த்து தெளித்து நன்றாக கிளறி விட வேண்டும். வெல்லம் பாகு பதத்திற்கு வந்த பிறகு அதில் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.பின்னர் அதில் பொடித்து வைத்துள்ள ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும். குக்கரில் வேகவைத்த கடலைப்பருப்பு நன்றாக மசியும் படி வெந்த பிறகு அதை தேங்காய் துருவல் கலந்த பாகில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

    பூரணம் நன்றாக கெட்டியாக வந்த பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும். பிறகு மோதக அச்சில் பீட்ருட் கலந்த மாவை சேர்த்து நன்றாக மோதகம் போல் செய்து அதற்குள் இந்த கடலைப்பருப்பு தேங்காய் பூரணத்தை வைத்து மூட வேண்டும். அனைத்து மோதகமும் செய்தபிறகு இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேக வைத்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான பீட்ருட் மோதகம் தயார்.

    • புரதச்சத்து அதிகம் கிடைக்கிறது.
    • ராஜ்மாவில் பொட்டாசியம், மக்னீசியம் போன்ற கனிமச்சத்துகளும் அதிகம்.

    ராஜ்மா என்ற மோட்டாவான பயறு விதையைக் கொண்டு செய்யப்படும் இந்த உணவின் பெயரே, அந்த பயற்றுக்கான பெயராகவும் மாறிவிட்டது.

    தமிழகத்தில் அதிக புழக்கத்தில் இல்லாத பயறு வகை இது. கிடைக்கும் பயறு விதைகளிலேயே மிகப்பெரியதும்கூட. சிவப்பு, பழுப்பு கலந்த நிறத்தில் சிறுநீரகத்தைப் போலவே இருக்கும். அதனால் ஆங்கிலத்தில் `கிட்னி பீன்ஸ்' எனவும் அழைக்கிறார்கள்..

    வடஇந்தியாவிலும் மெக்சிகோவிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சப்பாத்தி போன்ற வட இந்திய உணவுகளுடன், சமீபகாலமாக இந்த பயறு வகையும் பிரபலமாகி உள்ளது.

     பெரிதான இந்த பயறு விதையை, நீண்ட நேரம் ஊற வைக்க வேண்டும், இல்லை என்றால் வேகாது. இந்த பயறு தோலில் சில நச்சுப்பொருட்கள் இருக்க வாய்ப்பு உண்டு. வேகவைக்கும்போது இது வெளியேறிவிடும்.

    சிவப்பு ராஜ்மாதான் பரவலாகக் கிடைக்கிறது. இது சாலட், பிரட்டல், குழம்பு, கெட்டிக்குழம்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இதை தனியாக சாப்பிடுவதைவிட, மற்ற தானிய உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும்போது புரதச்சத்து அதிகம் கிடைக்கிறது.

    ராஜ்மாவில் பொட்டாசியம், மக்னீசியம் போன்ற கனிமச்சத்துகளும் அதிகம். இதில் இருக்கும் நார்ச்சத்து, கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கக்கூடியது. கரையக்கூடிய நார்ச்சத்து இதில் அதிகமாக இருக்கிறது.

    உயர் ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்த நார்ச்சத்து உதவும். இதில் உள்ள இரும்புச்சத்து உடலுக்கு அதிக சக்தியைத் தரும், செரிமானத்துக்கும் உதவும். குடல் பகுதிகளில் நல்ல பாக்டீரியாவின் எண்ணிக்கையை அதிகரித்து, குடலுக்கு வலிமையைக் கொடுக்கும். ராஜ்மாவை முளைகட்டிப் பயன்படுத்த முடியாது. சோறு, சப்பாத்தியுடன் சேர்த்தோ அல்லது சூப்பின் சுவை, மணத்தைக் கூட்டவோ பயன்படுகிறது.

    புற்றுநோய் போன்ற கொடிய நோயிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால், ராஜ்மாவை வாரத்தில் ஒருமுறையேனும் சாப்பிடுங்கள். இதை உட்கொள்வதன் மூலம், உடல் உயிரியல் கலவைகளைப் பெறுகிறது. இது புற்றுநோய் உருவாகும் அபாயத்தைக் குறைக்கும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே இது உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும்.

    பீன்சில் உள்ள இரும்புச்சத்து உடலில் ஆற்றல் பற்றாக்குறையை அனுமதிக்காது. இது ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கிறது. உங்களை ஆற்றல் நிறைந்ததாக உணர வைக்கிறது. பீன்ஸில் உள்ள புரதம், செல்களை உருவாக்குகிறது. உடலின் வலிமையையும் ஆற்றலையும் பராமரிக்க, கிட்னி பீன்ஸ் சிறந்த தேர்வு. இது உடல் கட்டமைப்பிற்கும் உதவுகிறது.

    இதனுடன், கிட்னி பீன்ஸ் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும், ஏனெனில் இதில் ஆக்சிஜனேற்றிகள், ஃபோலிக் அமிலம், துத்தநாகம், இரும்புச்சத்து உள்ளது.

    ×