search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தைகளை குறிவைத்து தாக்கும் புதிய வைரஸ் காய்ச்சல்: தடுப்பது எப்படி?
    X

    குழந்தைகளை குறிவைத்து தாக்கும் புதிய வைரஸ் காய்ச்சல்: தடுப்பது எப்படி?

    • காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தனிமைப்படுத்தி கவனிக்க வேண்டும்.
    • வைரசின் தாக்கத்தை பொறுத்து மருந்துகள் கொடுக்க வேண்டும்.

    உலகையே உலுக்கிய கொரோனாவின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, தற்போதுதான் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறோம். கொரோனாவை தொடர்ந்தும் சில பெயர்களில், பரிணாமங்களில் வைரஸ் காய்ச்சல்கள் வந்தன. ஆனால் அவையாவும் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

    இந்தநிலையில், குழந்தைகளை குறி வைத்து தாக்கும் புதிய வைரஸ் காய்ச்சல் மக்கள் மனதில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிக்கப்பட்டு உள்ளது.

    தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகளுக்கு புதுவித காய்ச்சல் பரவி வருகிறது.

    மதுரையை சுற்றி உள்ள மாவட்டங்களிலும் காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து செல்கிறது. இதற்கு காரணம் என்ன, எவ்வாறு தடுக்கலாம்? என்பது குறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரியின் குழந்தைகள் நலப்பிரிவு துறை தலைவர் பாலசங்கர் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதற்கு காரணம் பன்றிக்காய்ச்சல் வைரஸ் எனப்படும் 'இன்புளுவென்சா' வைரஸ் தான்.

    பன்றிகாய்ச்சல் வைரசில் எச்1என்1, எச்2என்2 என பல வகை இருக்கிறது. அதில் இதுவும் ஒன்று. இது பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் வருகிறது.

    பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளுக்கு அதிகமாக வருகிறது. அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

    கொரோனா வைரஸ் பரவி வந்த காலத்தில் மக்களும் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் இருந்தனர். ஆனால், தற்போது அதுபோன்ற கட்டுப்பாடுகள் இல்லை. எல்லா இடங்களுக்கும் செல்கின்றனர். கொரோனா பரவி விடக்கூடாது என்பதற்காக சமூக இடைவெளியை கடைபிடித்தோம், அடிக்கடி கை கழுவினோம், முக கவசம் அணிந்தோம். ஆனால், தற்போது எல்லாவற்றையும் மறந்து விட்டதால் இப்போது இந்த வைரஸ் அதிகமாக பரவி வருகிறது.

    பள்ளிகளில் ஒரு குழந்தைக்கு வந்தால் அந்த குழந்தையிடம் இருந்து அடுத்தடுத்து குழந்தைகளுக்கு எளிதாக பரவி விடுகிறது. இதனை கட்டுப்படுத்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தனிமைப்படுத்தி கவனிக்க வேண்டும்.

    அதிக காய்ச்சல் இருக்கும் பட்சத்தில் டாக்டர்களின் பரிந்துரையின்படி, காய்ச்சல்- இருமலுக்கும் மருந்து கொடுக்கலாம். மேலும், சுடு தண்ணீர் அதிக அளவு கொடுக்க வேண்டும். காலையிலும், மாலையிலும் தேன் கொடுக்கலாம். வைரசின் தாக்கத்தை பொறுத்து மருந்துகள் கொடுக்க வேண்டும்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த காலங்களில் காய்ச்சல் பரிசோதனைக்கு தினமும் 300 பேர் வருவார்கள். ஆனால், கடந்த சில தினங்களாக தினமும் 100 முதல் 150 பேர் வரை கூடுதலாக புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதில் அதிக காய்ச்சல் பாதிப்பு் உள்ளவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகின்றனர். சளி அதிகமாகவும், மூச்சு விடுவதற்கு சிரமமாக இருந்தால் அந்த குழந்தைகளும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    குறிப்பாக, 1 வயதுக்கும் குறைவான பச்சிளம்குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அவர்களை கூடுதலாக கவனிக்க வேண்டும். அதுபோன்ற குழந்தைகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

    வரும் நாட்களில் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகள் முக கவசம் அணிந்து சென்றால், நோய் தொற்று பரவுவதில் இருந்து தப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×