search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகள் ஏன் தாத்தா பாட்டியுடன் வளர வேண்டும்
    X
    குழந்தைகள் ஏன் தாத்தா பாட்டியுடன் வளர வேண்டும்

    குழந்தைகள் ஏன் தாத்தா பாட்டியுடன் வளர வேண்டும்

    தாத்தா-பாட்டிகளோடு வளரும் குழந்தைகளின் நடத்தைகளும், செயல்பாடுகளும் மேம்பட்டதாக இருக்கும் என்பது அறிவியல் ரீதியாக உறுதியாகியுள்ளது.
    வேலைக்கு செல்லும் பெற்றோரின் குழந்தைகளை தாத்தா, பாட்டிகள் பொறுப்போடு கவனித்துக் கொள்வார்கள். அதனால் குழந்தைகள் சரியான நேரத்திற்கு சாப்பிட்டார்களா? தூங்கினார்களா? என்று பெற்றோர் கவலைப்பட வேண்டியதில்லை. சிலர் குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக வேலைக்கு ஆட்களை அமர்த்துவார்கள். அவர்களை விட அன்புடனும், அக்கறையுடனும் தாத்தா -பாட்டிகள் தங்கள் பேரக் குழந்தைகளை கவனித்துக் கொள்வார்கள். தாத்தா-பாட்டிகளுடன் வசிக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரை பிரிந்து அன்னியமாக இருக்கும் உணர்வு எழாது. வீட்டில் பாதுகாப்புடன் இருப்பதாக உணர்வார்கள்.

    தாத்தா - பாட்டிகளிடம் வளரும் குழந்தைகள் குடும்ப பின்னணியை முழுமையாக தெரிந்து கொள்வார்கள். உறவுகளின் உன்னதத்தையும் புரிந்து கொண்டு அவர்களுக்கு உரிய மதிப்பை கொடுப்பார்கள். குடும்ப சூழ்நிலை, பெற்றோர் எதிர்கொள்ளும் கஷ்டங்களை தாத்தா-பாட்டிகள் குழந்தைகளுக்கு சொல்லி புரியவைப்பார்கள். பாசம், மரியாதை, ஒழுக்கம், சுய கட்டுப்பாடு போன்ற குணங்களை அந்த குழந்தைகள் வளர்த்துக்கொள்வார்கள். மற்ற குழந்தைகளை விட புத்திசாலித் தனமாகவும், அறிவு முதிர்ச்சியுடனும் வளர்வார்கள்.

    தாத்தா-பாட்டிகளுடன் அதிக நேரத்தை செலவிடும் குழந்தைகள் நிறைய வாழ்வியல் விஷயங்களை கற்றுக்கொள்வார்கள். சிக்கலான சூழ்நிலையை கையாளும் திறமையும் அவர்களிடம் இருக்கும். பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வழிமுறைகளையும் அறிந்துகொள்கிறார்கள். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், தாத்தா-பாட்டிகளுடன் வளரும் குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளை விட தனிமை, பதற்றம், மனச்சோர்வு போன்ற பாதிப்புகள் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    கதைகள் மூலம் வாழ்க்கையின் எதார்த்தத்தை குழந்தைகளுக்கு எளிதாக தாத்தா-பாட்டிகள் புரியவைத் துவிடுவார்கள். அவர்கள் சொல்லும் கதைகள் குழந்தைகளின் அறிவாற்றலை வளர்க்கும். நல்ல போதனைகளை கற்றுக் கொடுக்கும். அதன்படி ஒழுக்கம், சம்பிரதாயங்களை குழந்தைகள் கடைப்பிடிக்க தொடங்கி விடுவார்கள். சமூகத்தில் மற்றவர்கள் பாராட்டும் நபராகவும் வளர்வார்கள்.

    வயதாகும்போது ஞாபகமறதி, மன சோர்வு போன்ற பாதிப்புக்கு நிறைய பேர் ஆளாகிறார்கள். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்ன வென்றால் இந்த நோய்களெல்லாம் முதியவர்கள் தனிமையில் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. பேரக் குழந்தைகளுடன் வசிப்பவர்களுக்கு இத்தகைய பாதிப்புகள் அரிதாகவே ஏற்படுகின்றன. இதனை பெற்றோர் புரிந்து கொண்டு தங்கள் குழந்தைகளை தாத்தா - பாட்டியுடன் நேரத்தை செலவிட அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் வீட்டில் தனிமை விலகி இனிமை நிலவும்.
    Next Story
    ×