search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தை வளர்ப்பு
    X
    குழந்தை வளர்ப்பு

    உங்கள் குழந்தை யானையா.. புலியா..

    இந்தியாவில் இருக்கும் பெற்றோர்களில் பலரும் டைகர் பேரன்ட்டிங் முறையில் தான் குழந்தைகளை வளர்த்துக்கொண்டிருக்கிறோம்.
    குழந்தை வளர்ப்பில் எத்தனை வகைகள் இருந்தாலும், 2010-ம் ஆண்டுக்கு பிறகு உலகத்துக்கு தெரியவந்த டைகர் பேரன்ட்டிங் (புலியின் குழந்தை வளர்ப்பு முறை) மற்றும் எலிபென்ட் பேரன்ட்டிங் (யானையின் குழந்தை வளர்ப்பு முறை) ஆகிய 2 வகைகளே இன்றைய பெற்றோர்களால் அதிகம் கையாளப்பட்டு வருகின்றன.

    இந்தியாவில் இருக்கும் பெற்றோர்களில் பலரும் டைகர் பேரன்ட்டிங் முறையில் தான் குழந்தைகளை வளர்த்துக்கொண்டிருக்கிறோம். நிறைய கண்டிப்பு, கொஞ்சம் கறார், விதிமுறைகள், சுதந்திரமின்மை, பொழுது போக்குக்கு தடை, வெற்றியும் சாதனையும்தான் முக்கியம் இவையெல்லாம் ‘டைகர் பேரன்ட்டிங்‘ அணுகுமுறைகள்.

    இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், பொண்ணு அடுத்த வரு‌‌ஷம் பிளஸ்-2 எழுதப் போறா. அதனால, இந்த வரு‌‌ஷமே கேபிள் டி.வி.யை கட் பண்ணிட்டேன். சீரியலையெல்லாம் தியாகம் செஞ்சுட்டேன் என்பவர்களெல்லாம், டைகர் பேரன்ட்டிங் பெற்றோர்களே. டைகர் பேரன்ட்டிங்கில், உங்கள் பிள்ளைகளை சாதனையாளர்களாக ஆக்குவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. படிப்பு, விளையாட்டு, பாட்டு, நடனம் என எதை தொட்டாலும் உங்கள் பிள்ளை சிறந்தவராக இருப்பார்.

    இதில் இருக்கும் பாதகங்களும், தோல்விகளும் வாழ்க்கையில் ஓர் அங்கம்தான், தோல்விகள் தான் வெற்றிகளை இன்னும் ருசியாக்கும் என்பது, இந்த ஸ்டைலில் வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு தெரியாமலேயே போய்விடலாம். விட்டுக்கொடுத்தல், உணர்வுபூர்வமாக ஒரு வி‌‌ஷயத்தை அணுகுவதெல்லாம் இந்த பிள்ளைகளுக்கு கைவராமல் போகலாம். சக குழந்தைகளுடன் சேர்ந்து சோர்வாகும் வரை விளையாடியது, செல்லப்பிராணியை வளர்த்தது, மழையில் நனைந்தது என பால்யகால மகிழ்வான நினைவுகள் பெரியவர்களாக வளர்ந்த பிறகு, இந்த பிள்ளைகளுக்கு குறைவாகவே இருக்கும்.

    யானைகள் தங்கள் குட்டிகளை ஓரளவுக்கு வளரும் வரை கால்களுக்குள்ளேயே வைத்திருக்கும். அவ்வப்போது, துதிக்கையால் குட்டியை தடவிக் கொடுத்துக் கொண்டிருக்கும். எலிபென்ட் பேரன்ட்டிங்கும் இப்படிப்பட்டது தான். பிள்ளைகளுக்கு நிறைய செல்லம் கொடுத்து கொண்டிருப்பார்கள்.

    அன்பு, அரவணைப்பு, பிள்ளைகளின் சந்தோ‌‌ஷத்துக்கு முதலிடம் கொடுப்பது, உடல் ஆரோக்கியத்துக்கு கொடுக்கும் அளவுக்கு மன ஆரோக்கியத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பது என்று இருப்பார்கள். பிள்ளைகள் நிறைய சுதந்திரத்தை அனுபவிப்பார்கள். கெடுபிடி இல்லாமல் வளர்வார்கள். நினைத்ததையெல்லாம் சாதிப்பார்கள். இதிலும் பாதகங்கள் இருக்கின்றன.

    தனக்கு கொடுக்கப்படும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவது, ஸ்ட்ரெஸ் இல்லாமல் இருக்கிறேன், பேர்வழி என்று சோம்பேறியாக இருப்பது, தன் வேலைகளை அடுத்தவர் மேல் சுமத்துவது, அலட்சியம் போன்ற இயல்புகளுடன் இருக்கும் குழந்தைகளுக்கு எலிபென்ட் பேரன்ட்டிங் சரிவராது.

    இரண்டில் எது சிறந்தது என்றால், இந்த பேரன்ட்டிங் முறைகளில் ஒன்றை மட்டுமே பாலோ செய்வதால் பயனில்லை. உங்களின் அதிகப்படியான கண்டிப்பால், கொஞ்சம்கூட சுதந்திரமே இல்லாமல் குழந்தை தவிக்கும்போது, எலிபென்ட் பேரன்ட்டிங்குக்கு மாறிவிடுங்கள். அதே நேரம், உங்கள் பிள்ளை சாதனையாளராக உருவாக, அவ்வப்போது டைகர் பேரன்ட்டிங்கைக் கையிலெடுங்கள் என்கிறார்கள் உளவியலாளர்கள்.
    Next Story
    ×