search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர்பவனி: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

    • இன்று(வியாழக்கிழமை) மாதாவின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
    • இன்று மாலை 6 மணிக்கு அன்னையின் திருக்கொடி இறக்கப்படுகிறது.

    இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயம் முக்கிய இடம் வகிக்கிறது.

    மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தளமாக விளங்கும் மாதாஆலயம் அமைந்துள்ள வேளாங்கண்ணி, கீழே நாடுகளின் 'லூர்து நகர்' என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது.

    கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய 'பசிலிக்கா' என்ற அந்தஸ்து பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் கட்டிட அழகு காண்போரை பிரமிக்க செய்வதாகும். இங்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆண்டு திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.

    துன்பத்தில் துவண்டு அமைதி தேடி மன்றாடி வருபவர்களின் மனதை ஆற்றுப்படுத்தி புது வாழ்விற்கு வழிகாட்டி வரும் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 8-ந் தேதி நடக்கிறது.

    இந்த விழாவில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாதாவை வழிபட்டு செல்வார்கள். விழாவுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வேண்டி விரதம் இருந்த, நடைபயணமாக வேளாங்கண்ணிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இவ்வாறு பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா கடந்த மாதம்(ஆகஸ்டு)் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கியது முதல் ஒவ்வொரு நாளும் பேராலயத்திலும், பேராலய வளாகத்திலும், விண்மீன் ஆலயம், மேல் கோவில், கீழ் கோவில் ஆகிய இடங்களிலும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கு, மராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    இதேபோல சிலுவை பாதை வழிபாடு, ஜெபமாலை, நவநாள் ஜெபம், மாதா மன்றாட்டு திவ்ய நற்கருணை ஆசி உள்ளிட்ட பிரார்த்தனை நிகழ்ச்சிகள் விமரிசையாக நடந்தன.

    வேளாங்கண்ணி பேராலய திருவிழாவின் பிரதான நிகழ்ச்சியான மாதா பெரிய தேர்பவனி நேற்று இரவு நடந்தது. தேர்பவனியையொட்டி தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

    இதில் பேராலய அதிபர் இருதயராஜ், பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள், அருட் தந்தைகள், அருட் சகோதரிகள் கலந்து கொண்டனர்.

    நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா, துணைத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பலியை தொடர்ந்து தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தேரை புனிதம் செய்தார். இதையடுத்து இரவு 8 மணிக்கு பேராலயத்தின் மணிகள் ஒழிக்க மின்விளக்கு மலர் அலங்காரத்துடன் தயார் நிலையில் இருந்த புனித ஆரோக்கிய மாதா சொரூபம் தாங்கிய பெரிய தேர் பேராலய முகப்பிலிருந்து புறப்பட்டு சென்றது.

    தேர் பவனி தொடங்குவதற்கு சற்று முன்பாக லேசான தூறலுடன் மழை பெய்ய தொடங்கியது. சரியாக 8 மணிக்கு தேர்பவனி தொடங்கிய நேரத்தில் மழை கொட்டியது. கொட்டும் மழையிலும் தேர்பவனி நடந்தது.

    தேர் புறப்பட்டதும் பேராலயத்தை சுற்றி திரண்டு இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் உற்சாக மிகுதியில் கைதட்டி 'மரியே வாழ்க' என கோஷமிட்டு பிரார்த்தனை செய்தனர்.

    மாதா தேருக்கு முன்பாக புனித மிக்கேல் சமன்சு, புனித சூசையப்பர், புனித அந்தோணியார், புனித செபஸ்தியார், அமலோற்பவ மாதா, புனித உத்ரிய மாதா ஆகிய 6 தேர்கள் வண்ண விளக்குகளில் அலங்காரங்களுடன் அணிவகுத்தன.

    இந்த 7 தேர்கள் முன்பாகவும், தேரை பின்தொடர்ந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்றனர். லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் அலங்கார தேர்கள் வலம் வரும் நிகழ்ச்சி கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.

    தேர்வலம் வரும்போது பக்தர்கள் தேர் மீது பூக்களை தூவி ஜெபித்தனர். தேர்பவனி பேராலய முகப்பிற்கு வந்து சேர்ந்ததும் புனித ஆரோக்கிய மாதாவிற்கு நன்றி செலுத்தும் விதமாக பிரார்த்தனை நிறைவேற்றப்பட்டது. வேளாங்கண்ணி முழுவதும் பல்வேறு இடங்களில் பெரிய வண்ணத்திரைகள் அமைக்கப்பட்டு தேர்பவனி நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. பக்தர்கள் ஆங்காங்கு இருந்தபடியே தேர் பவனி செல்வதை பார்த்து மகிழ்ந்தனர். அப்போது அவர்கள் அன்னை மரியே வாழ்க என கைகூப்பி வணங்கி கோஷமிட்டனர்.

    தேர்பவனியையொட்டி நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைைமயில் வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் வேளாங்கண்ணி முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    அதேபோல் கடலோர பகுதிகளில் கடலோர காவல் படை போலீசார் 200 பேர் ரோந்து பணியில் ஈடுபட்டுத்தப்பட்டனர்.

    இன்று(வியாழக்கிழமை) மாதாவின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. மாலையில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருவிழா சிறப்பு கூற்று பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

    மாலை 6 மணிக்கு அன்னையின் திருக்கொடி இறக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து பேராலய கீழ்கோவிலில் மாதா மன்றாட்டு, திவ்ய நற்குண ஆசி, தமிழில் திருப்பலி ஆகியவை நிறைவேற்றப்படுகிறது.

    Next Story
    ×