search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    100 மண்டகப்படிகளில் எழுந்தருளிய முருகப்பெருமான்: தங்க குதிரையில் வந்து பூப்பல்லக்கில் திரும்பினார்
    X

    தங்கக்குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பட்டதையும், சர்வ அலங்காரத்தில் சுப்பிரமணியசாமி, தெய்வானையையும் படத்தில் காணலாம்.


    100 மண்டகப்படிகளில் எழுந்தருளிய முருகப்பெருமான்: தங்க குதிரையில் வந்து பூப்பல்லக்கில் திரும்பினார்

    • மொட்டையரசு திடலை சுற்றி பக்தர்கள் சுமார் 100 மண்டகப்படிகள் அமைத்து சுவாமியை வரவேற்றனர்.
    • வழிநெடுகிலும் ஆங்காங்கே பக்தர்கள் திருக்கண் அமைத்து முருகப்பெருமானை வழிபட்டனர்.

    அறுபடைவீடுகளில் முதற்படைவீடு கொண்ட திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கடந்த 24-ந்தேதி காப்பு கட்டுதலுடன் வைகாசி விசாக திருவிழா தொடங்கி நடைபெற்றது. திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் 2-ந்தேதி விசாக விழா கோலாகலமாக நடந்தது. திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று மொட்டையரசு உற்சவம் நடந்தது.

    இதனையொட்டி கோவிலுக்குள் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணியசாமி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், சர்வ அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதனையடுத்து மேள தாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி புறப்பட்டு ஆஸ்தான மண்டபத்தில் தயாராக இருந்த தங்க குதிரையில் எழுந்தருளினார்.

    இதனை தொடர்ந்து கோவிலில் இருந்து தங்க குதிரையில் அமர்ந்தபடி தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி புறப்பட்டு சன்னதி தெருவழியாக என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள மொட்டையரசு திடலுக்கு வந்தார்.

    மொட்டையரசு திடலை சுற்றி பக்தர்கள் சுமார் 100 மண்டகப்படிகள் அமைத்து சுவாமியை வரவேற்றனர். காலை 11 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒவ்வொரு மண்டகப்படியாக முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 100 மண்டகப்படியிலும் முருகப்பெருமானுக்கு பல்வேறு நெய்வேத்தியங்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை, மகாதீப, தூப ஆராதனை நடந்தது.

    கோவிலில் இருந்து மொட்டையரசு திடலுக்கு தங்கக்குதிரையில் வந்த முருகப்பெருமான், வாசனை கமழும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த பூப்பல்லக்கில் தன் இருப்பிடம் திரும்பினார். மொட்டையரசு திடலில் இருந்து கோவில் வரை வழிநெடுகிலும் ஆங்காங்கே பக்தர்கள் திருக்கண் அமைத்து முருகப்பெருமானை வழிபட்டனர்.

    Next Story
    ×